இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதினொருவர்  அணிக்கும் இடையில் நடைபெறும் இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியில் முதல் நாள் (11) ஆட்ட நேர நிறைவின்போது நான்கு வீரர்களின் அரைச் சதத்தோடு  இலங்கை கிரிக்கெட் அணி வலுப்பெற்றுள்ளது.

இளையோர் ஆசிய கிண்ணத்தில் அடுத்தடுத்த வெற்றிகளை சுவைத்த இலங்கை

தற்போது இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி தமது அயல் நாட்டவர்களோடு மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர், மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் மூன்று T-20 போட்டிகள் கொண்ட தொடர் என்பவற்றில் விளையாடவுள்ளது.

இத்தொடர்களுக்கு முன்னதாக தமது விருந்தினர் அணியுடன் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதினொருவர் அணி இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியொன்றில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி, கொல்கத்தா ஜடவ்பூர் பல்கலைக்கழக  மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இந்தப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய கிரிக்கெட் வாரிய  தலைவர் பதினொருவர் அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இலங்கை வீரர்களுக்கு வழங்கியிருந்தது.

தொடர்ந்து மைதானம் விரைந்த இலங்கை வீரர்கள் ஒரு அழகிய ஆரம்பத்தினை காட்டியிருந்தனர். தொடக்க வீரர்களாக களம் நுழைந்திருந்த சதீர சமரவிக்ரம மற்றும் திமுத் கருணாரத்ன ஆகிய இருவரும் அரைச்சதம் விளாசியிருந்தனர்.

இதில் இளம் துடுப்பாட்ட வீரரான சதீர சமரவிக்ரம சற்று அதிரடி காட்டி 13 பெளண்டரிகளுடன் மொத்தமாக 77 பந்துகளுக்கு 74 ஓட்டங்களினைக் குவித்திருந்தார். மறுமுனையில் கருணாரத்ன 62 பந்துகளுக்கு 7 பெளண்டரிகள் அடங்களாக 50 ஓட்டங்களினைப் பெற்றிருந்தபோது தனது துடுப்பாட்டத்தினை நிறைவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து நான்காம் இலக்க துடுப்பாட்ட வீரராக மைதானம் விரைந்த இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்செலோ மெதிவ்சும் அரைச்சதம் கடந்து தமது தரப்பினை வலுப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

காயம் காரணமாக பாகிஸ்தான் அணியுடனான தொடரில் பங்கேற்காது போயிருந்த மெதிவ்ஸ் சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றினை இந்தப் போட்டியில் வெளிப்படுத்தி 93 பந்துகளுக்கு 6 பெளண்டரிகளுடன் 54 ஓட்டங்களினைக் குவித்து தனது வழமையான ஆட்டத்துக்கு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுடனான தொடரில் தமது பந்துவீச்சுப் பாணியை மாற்றவுள்ள இலங்கை

உஷ்ணமான காலநிலையைக் கொண்ட…

தொடர்ந்து மத்திய வரிசையில் களமிறங்கிய நிரோஷன் திக்வெல்ல மற்றும் தில்ருவான் பெரேரா ஆகியோரின் அதிரடியோடு இலங்கை அணி முதல் நாள் ஆட்ட நேர நிறைவில் 88 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து 411 ஓட்டங்கள் என்ற வலுவான நிலையில் காணப்படுகின்றது.

இலங்கை அணிக்காக இறுதி வரை ஆட்டமிழக்காமல் நின்றிருந்த நிரோஷன் திக்வெல்ல எதிரணிப் பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்து 13 பெளண்டரிகள் விளாசி வெறும் 59 பந்துகளுக்கு 73 ஓட்டங்களினைக் குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதோடு தில்ருவான் பெரேரா 2 சிக்ஸர்கள் மற்றும் 6 பெளண்டரிகள் உள்ளடங்கலாக 44 பந்துகளில் 48 ஓட்டங்களினை பெற்றிருந்தார்.

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதினொருவர் அணியின் பந்து வீச்சு சார்பாக சந்தீப் வாரீயர் மற்றும் ஆகாஷ் பண்டாரி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை – 411/6 (88) சதீர சமரவிக்ரம 74(77), நிரோஷன் திக்வெல்ல 73(59)*, அஞ்செலோ மெதிவ்ஸ் 54(93), திமுத் கருணாரத்ன 50(62), தில்ருவான் பெரேரா 48(44), ரோஷென் சில்வா 36(53), சந்தீப் வாரியர் 60/2(15), ஆகாஷ் பண்டாரி 111/2(23)

போட்டியின் இரண்டாம் நாள் நாளை தொடரும்