முதல் வெற்றியுடன் அரையிறுதிக்கான எதிர்பார்ப்பை நீடித்துள்ள இலங்கை மகளிர் அணி

716
Image Courtesy - ICC World Twenty20 Twitter

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் ஆறாவது மகளிர் T20I உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில், இன்று (15) நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவது குழுநிலைப் போட்டியில் இலங்கை மகளிர் அணி 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, அரையிறுதிக்கான எதிர்பார்ப்பை நிலைநிறுத்தியுள்ளது.

மகளிர் T20I உலகக் கிண்ணத் தொடரில் இலங்கைக்கு முதல் தோல்வி

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் ஆறாவது மகளிர் T20I ….

மகளிர் T20I உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் A குழுவில் இடம்பெற்றிருக்கும் இலங்கை மற்றும் பங்களாதேஷ் மகளிர் அணிகள் தங்களுடைய மூன்றாவது லீக் போட்டியில் கிரோஷ் இஸ்லேட் மைதானத்தில் மோதின.

ஏற்கனவே தங்களுடைய இரண்டு போட்டிகளிலும் பங்களாதேஷ் அணி தோல்வியடைந்திருந்ததுடன், இலங்கை மகளிர் அணி ஒரு வெற்றி மற்றும் ஒரு சமனிலை என்ற ரீதியில் இன்றைய தினம் அரையிறுதிக்கான எதிர்பார்ப்பை தக்கவைக்கும் நோக்கில் களமிறங்கியது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் மகளிர் அணி இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது. தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறிய இலங்கை அணி, இன்றைய போட்டியிலும் மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 97 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

ஆரம்ப இணைப்பாட்டம் அணிக்கு தொடர்ந்தும் பின்னடைவை ஏற்படுத்த, அணித் தலைவி சமரி அத்தபத்து மத்தியவரிசை வீராங்கனையாக களமிறங்கினார். எவ்வாறாயினும் மீண்டும் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனைகள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, சமரி அத்தபத்துவும் 12 ஓட்டங்களுடன் வெளியேறினார். எனினும், இறுதி ஓவர் வரை போராடிய முன்னாள் அணித் தலைவி சஷிகலா சிறிவர்தன 31 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு சற்று பலம் சேர்த்தார்.

“எமது திட்டத்தை விடவும் இங்கிலாந்து அணி அதிகமான ஓட்டங்களை குவித்துள்ளது” ; மலிந்த புஷ்பகுமார

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சை பொருத்தவரை வேகப்பந்து வீச்சால் மிரட்டிய ஜஹனரா அலாம் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை அதிகபட்சமாக கைப்பற்றினார்.

பின்னர், இலகுவான வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய நடப்பு அசிய கிண்ண சம்பியனான பங்களாதேஷ் மகளிர் அணி, இலங்கை மகளிர் அணியின் பந்து வீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் தடுமாறியது. இலங்கை அணியின் ஆரம்ப பந்து ஓவரை வீசிய உதேசிகா பிரபோதினி முதல் ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணிக்கு நம்பிக்கையளித்தார்.

தொடர்ந்து இலங்கை மகளிர் அணி சிறந்த பந்து வீச்சு மாற்றங்களுடன் நெருக்கடி கொடுக்க, பங்களாதேஷ் மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 72 ஓட்டங்களை மாத்திரமே பெற்று, தோல்வியடைந்தது. பங்களாதேஷ் அணி சார்பில் அதிகபட்சமாக நைகர் சுல்தானா 20 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

அயர்லாந்திடம் அதிர்ச்சித் தோல்வியடைந்த இலங்கை மகளிர் அணி

சிறந்த பந்து வீச்சை பதிவுசெய்த இலங்கை மகளிர் அணி சார்பில், அணித் தலைவி சமரி அத்தபத்து 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், துடுப்பாட்டத்தில் பிரகாசித்த சஷிகலா சிறிவர்தன மற்றும் உதேசிகா பிரபோதினி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அதேவேளை, போட்டியில் சகலதுறை பிரகாசிப்பை வெளிப்படுத்திய சஷிகலா சிறிவர்தன ஆட்டநாயகியாக தெரிவுசெய்யப்பட்டார்.

இந்தப் போட்டியில் வெற்றிபெற்றதன் ஊடாக இலங்கை மகளிர் அணி, A குழுவின் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், தங்களுடைய அரையிறுதிக்கான எதிர்பார்ப்பையும் தக்கவைத்துள்ளது. இதன்படி இலங்கை அணி எதிர்வரும் 17ம் திகதி தங்களுடைய இறுதி லீக் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொள்ளவுள்ளது. குறித்த போட்டியில் இலங்கை அணி வெற்றிபெறுமாயின் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

போட்டி சுருக்கம்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<