ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிராக நேற்று (19) நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய இந்திய அணி, தோல்வி அடையாத அணியாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.
துபாய் ஐசிசி பயிற்சியக மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியானது மழை காரணமாக ஒவ்வொரு அணிக்கும் தலா 20 ஓவர்கள் கொண்டதாக நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய 19 வயதுக்குட்பட்ட அணி, முதலில் பந்து வீசியது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 138 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் சாமிக்க ஹீனட்டிகல 42 ஓட்டங்களையும், அணித் தலைவர் விமத் தின்சர 32 ஓட்டங்களையும், செத்மிக்க செனவிரட்ன 30 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர்.
பந்துவீச்சில் ஹெனில் பட்டேல் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், கனிஷ்க் சௌஹான் 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய 19 வயதுக்குட்பட்ட அணி, 18 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 139 ஓட்டங்களைப் பெற்று 8 விக்கெட்களால் வெற்றியீட்டியது.
- செத்மிக்கவின் அபார பந்துவீச்சில் இலங்கை இளையோருக்கு முதல் வெற்றி
- சாமிக்கவின் சகலதுறை ஆட்டத்தால் இலங்கை இளையோருக்கு த்ரில் வெற்றி
- இலங்கையை வீழ்த்தி தோல்வியடையாத அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது பங்களாதேஷ்
அணித் தலைவர் ஆயுஷ் மஹாத்ரே 7 ஓட்டங்களுடனும், வைபவ் சூரயவன்ஷி 9 ஓட்டங்களுடனும் விமத் நிம்சரவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் 3ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஆரோன் ஜோர்ஜ், விஹான் மல்ஹோத்ரா ஆகிய இருவரும் 87 பந்துகளில் 114 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று இந்தியாவை வெற்றி அடையச் செய்தனர்.
விஹான் மல்ஹோத்ரா 61 ஓட்டங்களுடனும், ஆரோன் ஜோர்ஜ் 58 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
பந்துவீச்சில் விமத் நிம்சர 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற 2ஆவது அரையிறுதிப் போட்டியில் பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்ட அணியை 8 விக்கெட்டுகளால் வீழ்த்தி பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றது.
துபாய் தி செவன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியானது மழை காரணமாக 27 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் நாளை (21) நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் உடன் இந்தியா பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















