ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிராக இன்று (17) நடைபெற்ற 11ஆவது லீக் போட்டியில் 39 ஓட்டங்களால் வெற்றியீட்டிய பங்களாதே; அணி, பி குழுவில் இருந்து தோல்வி அடையாத அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.
மறுபுறத்தில் 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அடைந்த முதல் தோல்வி இதுவாகும்.
துபாய் ஐசிசி பயிற்சியக மைதானத்தில் நடைபெற்ற முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்ட அணி, 46.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 225 ஓட்டங்களைப் பெற்றது.
ஆரம்ப வீரர் ஸவாத் அப்ரார் 49 ஓட்டங்களையும், ரிபாத் பெக் 36 ஓட்டங்களையும், கலாம் சிதிக்கி 32 ஓட்டங்களையும், பரீத் ஹசன் 29 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் கவிஜ கமகே 38 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும், விரான் சமுதித்த 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும், ரசித் நிம்சர 57 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
- செத்மிக்கவின் அபார பந்துவீச்சில் இலங்கை இளையோருக்கு முதல் வெற்றி
-
சாமிக்கவின் சகலதுறை ஆட்டத்தால் இலங்கை இளையோருக்கு த்ரில் வெற்றி
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி 49.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 186 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
துடுப்பாட்டத்தில் சாமிக்க ஹீனட்டிகல 41 ஓட்டங்களையும், ஆதம் ஹில்மி 39 ஓட்டங்களையும், அணித் தலைவர் விமத் டின்சர 17 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ஷஹாரியார் அஹ்மத் 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், இக்பால் ஹொசெய்ன் ஏமொன் 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், சமியுன் பசிர் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
போட்டியின் ஆட்டநாயகன் விருதை இக்பால் ஹொசெய்ன் ஏமொன் பெற்றுக்கொண்டார்.
இதன்படி, B குழுவில் முதல் இடத்தைப் பிடித்த பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்ட அணி A குழுவில் இரண்டாம் இடத்தைப் பெற்ற பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட அணி முதலாவது அரை இறுதிப் போட்டியில் எதிர்த்தாடும். அதேபோல, B குழுவில் இரண்டாம் இடத்தைப் பெற்ற இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி, A குழுவில் தோல்வி அடையாமல் முதல் இடத்தைப் பெற்ற இந்தியாவை இரண்டாவது அரை இறுதியில் சந்திக்கும். இந்த 2 அரையிறுதிப் போட்டிகளும் 19ஆம் திகதி நடைபெறவுள்ளது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















