ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணம் முதல் தடவையாக இலங்கையில்

ICC Women’s Cricket World Cup 2025

19
ICC 2025 Women’s Cricket World Cup

இந்த ஆண்டு நடைபெறவுள்ள 13ஆவது ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் கூட்டாக நடத்த உள்ளதாக ஐசிசி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் மஉகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இறுதியாக கடந்த 2013இல் மும்பையில் இந்தத் தொடர் நடைபெற்றதுடன், 1978 மற்றும் 1997 ஆகிய 2 ஆண்டுகளிலும் இந்தியாவில் ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

அதேபோல, இலங்கையில் முதல் தடவையாக ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரொன்று நடைபெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவிருக்கும் ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான திகதிகள் மற்றும் போட்டி நடைபெறும் இடங்களை ஐசிசி நேற்று (02) அறிவித்துள்ளது.

இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய எட்டு நாடுகள் பங்குபற்றவுள்ள இந்த தொடரானது செப்டம்பர் 30ஆம் திகதி ஆரம்பமாகி நவம்பர் 2ஆம் திகதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள ஐந்து இடங்களில் நடைபெறுகிறது.

அதன்படி பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி மைதானம், குவஹாத்தியில் உள்ள ACA மைதானம், இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானம், விசாகப்பட்டினத்தில் உள்ள ACA-VDCA மைதானம் மற்றும் கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானம் கியவை ஆகும்.

இந்த தொடர் முதலில் இந்தியாவில் மட்டுமே நடைபெற இருந்தது. ஆனால் அண்மையில் முடிவடைந்த ஆண்களுக்கான ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் அதற்குரிய போட்டிகள் அனைத்தும் துபாயிக்கு மாற்றப்பட்டன.

அதன்படி பாகிஸ்தானும் இந்தியாவுக்கு செல்லாது என்று அந்நாட்டு கிரிக்கெட் சபை ஐசிசியிடம் திட்டவட்டமாக தெரிவித்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணி விளையாடும் போட்டிகள் மட்டும் பொதுவான இடத்தில் நடத்தவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இம்முறை மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தானுக்குரிய போட்டிகள் அனைத்தும் கொழும்பில் நடைபெற உள்ளன.

இதில் பாகிஸ்தான் அணியின் தகுதிச் சுற்று நிலையைப் பொறுத்து, முதல் அரையிறுதிப் போட்டி அக்டோபர் 29ஆம் திகதி குவஹாத்தி அல்லது கொழும்பில் நடைபெறும். 2ஆவது அரையிறுதிப் போட்டி மறுநாள் அக்டோபர் 30ஆம் திகதி பெங்களூருவில் நடைபெறும். நவம்பர் 2ஆம் திகதி பெங்களூருவில் இறுதிப் போட்டி நடைபெறும். பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றால், அது கொழும்பில் நடைபெறும்.

மேலும், இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா விளையாடவுள்ள நிலையில், மற்ற போட்டிகளுக்கான அட்டவணை மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<