இறுதி ஓவரில் போட்டியை நழுவவிட்ட இலங்கை அணிக்கு ஐ.சி.சி அபராதம்

65

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நேற்று (01) கண்டி பல்லேகலையில் நடைபெற்ற முதலாவது டி20 சர்வதேச போட்டியில் இலங்கை அணி குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்துவீச தாமதமாகிய காரணத்தினால் இலங்கை கிரிக்கெட் அணி மீது சர்வதேச கிரிக்கெட் பேரவை அபராதம் விதித்துள்ளது. 

இருதரப்பு தொடருக்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர் ஆகிய இரு தொடர்களில் பங்கேற்கவுள்ளது. டெஸ்ட் தொடர் 1-1 என்ற அடிப்படையில் சமநிலையில் நிறைவுக்கு வந்தது. 

இலங்கைக்கு எதிரான T20 தொடரில் இருந்து வெளியேறும் லோக்கி பெர்குஸன்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளரான லோக்கி….

இந்நிலையில் சுற்றுப்பயணத்தின் அடுத்த தொடரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரின் முதல் போட்டி நேற்று (01) நடைபெற்றது. இப்போட்டியில் நியூசிலாந்து அணி மூன்று பந்துகள் மீதமிருக்க 5 விக்கெட்டுக்களினால் த்ரில் வெற்றி பெற்றது. 

போட்டியில் நாயண சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. நியூசிலாந்து அணி இரண்டாவதாக துடுப்பெடுத்தாடும் போது இலங்கை அணி களத்தடுப்பில் ஈடுபட்டிருந்தது. இதன் போது சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய விதிமுறையை மீறியதன் காரணமாகவே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

டி20 போட்டி என்ற அடிப்படையில் 20 ஓவர்களையும் வீசுவதற்கு ஒரு அணிக்கு குறிப்பிட்டளவு நேரம் வழங்கப்பட்டிருக்கின்றது. அவ்வாறு வழங்கப்பட்டுள்ள நேரத்திற்குள் நேற்றைய போட்டியில் இலங்கை அணியினரால் 2 ஓவர்கள் குறைவாக வீசப்பட்டிருந்தது.

ஐ.சி.சி இனுடைய இலக்கம் 2.22 சரத்தில் குறிப்பிடும் அணித் தலைவர்கள், வீரர்களினுடைய நடத்தை மற்றும் அவர்கள் சார்ந்த கோட்பாடுகளை உள்ளடக்கும் சரத்தின்படி இவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

T20 சர்வதேச போட்டிகளில் மாலிங்க புதிய உலக சாதனை

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையில் இன்று (1)…..

ஆரம்பத்தில் இவ்வாறு குறைந்த பந்துவீச்சு பிரதி பதிவு செய்யப்படுமாயின் ஒரு ஓவருக்கு வீரரின் போட்டி ஊதியத்தில் 10 சதவீத அபராத தொகையும், அணியின் தலைவருக்கு அதன் இரட்டிப்பு தொகையும் அபராதமாக விதிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போதைய சட்டத்தில் அணித்தலைவர் என தனியாக இல்லாமல் ஒரு ஓவருக்கு போட்டியில் விளையாடிய அனைத்து வீரர்களுக்கும் 20 சதவீத அபராதம் விதிக்கப்படும். 

அதன் பிரகாரம் இலங்கை அணி குறித்த இரண்டு ஓவர்களையும்  வீசுவதற்கு மேலதிக நேரம் எடுத்ததன் காரணமாக போட்டியில் விளையாடிய 11 வீரர்களுக்கும் ஒரு வீரருக்கு போட்டி ஊதியத்திலிருந்து 40 சதவீதம் அபராத தொகையாக விதிக்கப்பட்டுள்ளது. 

குறித்த குற்றச்சாட்டினை போட்டியின் களநடுவர்களான ரவீந்திர விமலசிறி, பிரகீத் ரம்புக்வெல்ல, மூன்றாம் நடுவர் லைன்டொன் ஹன்னிபெல் மற்றும் நான்காம் நடுவர் ரன்மோர் மார்டினெஸ் ஆகியோர் உறுதிப்படுத்த, போட்டியின் மத்தியஸ்தரான அண்டி பைக்ரொப்ட் மூலமாக ஐ.சி.சி இனால் இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் போட்டி முடிவடைந்ததன் பின்னர் இலங்கை அணித்தலைவவர் லசித் மாலிங்க குறித்த குற்றச்சாட்டினை ஒப்புக்கொண்டதன் காரணமாக மேலதிக விசாரணைகள் எதற்கும் அவர் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்பதையும் ஐ.சி.சி தெளிவுபடுத்தியுள்ளது.

டெஸ்ட் தொடருக்கான இந்திய ஏ அணியின் தலைவர்களாக கில், சாஹா

தென்னாபிரிக்க ஏ அணியுடன் டெஸ்ட் போட்டியில் மோதவுள்ள…..

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கும் இடையிலான டி20 சர்வதேச தொடரின் இரண்டாவது போட்டி நாளை (03) இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<