இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய களத்தடுப்பு பயிற்சியாளராக R. ஸ்ரீதரை குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதாக இலங்கை கிரிக்கெட் (SLC) சபை இன்று (17) அறிவித்துள்ளது.
தேசிய கிரிக்கெட் அணியின் தேர்வாளாராக மீண்டும் பிரமோத்ய விக்ரமசிங்க
R. ஸ்ரீதர்இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) Level – 3 தகுதி சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர் என்பதோடு, அவர் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கிம் T20 உலகக் கிண்ணத்தினை அடிப்படையாகக் கொண்டு இலங்கை வீரர்களுக்கு களத்தடுப்பு பயிற்சிகளை வழங்குவார் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
அதன்படி நான்கு மாத ஒப்பந்த அடிப்படையில் இலங்கை கிரிக்கெட் அணியுடன் இணைந்துள்ள ஸ்ரீதர் முன்னதாக 2014 முதல் 2021 ஆம் ஆண்டு வரை இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக பணியாற்றிய அனுபவம் கொண்டிருப்பதோடு, 300 இற்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளுக்கும் களத்தடுப்பு பயிற்சியாளராக செயற்பட்டிருப்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
தனது நியமனம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்ரீதர், இலங்கை வீரர்கள் எப்போதுமே இயல்பான திறமை, மன உறுதி மற்றும் கூட்டு முயற்சியால் தனித்துவமானவர்கள் என்று புகழ்ந்துள்ளதோடு, வீரர்களிடம் ஒரு முறையை திணிப்பது தனது நோக்கம் அல்ல என்றும், மாறாக அவர்களின் சுறுசுறுப்பு, விழிப்புணர்வு மற்றும் களத்தில் சிறந்து விளங்கும் தன்மை என்பவற்றுக்காக ஒரு சூழலை உருவாக்குவதே தனது பணி என்றும் கூறியுள்ளார்.
ஸ்ரீதர் தனது பயிற்றுவிப்பில் முதற்கட்டமாக பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக நடைபெறவிருக்கும் தொடர்களில் வீரர்களுடன் இணைந்து பணியாற்றவிருப்பதோடு, அதன் பின்னர் T20 உலகக் கிண்ணத்திற்கான ஆயத்த பணிகளில் கவனம் செலுத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் ஸ்ரீதர் ஏற்கனவே இந்த ஆண்டின் தொடக்கத்தில் இலங்கை கிரிக்கெட் உயர் செயற்திறன் நிலையத்தில் (High Performance Center), இலங்கையின் கிரிக்கெட் அணிகளுக்காக 10 நாட்கள் கொண்ட சிறப்பு களத்தடுப்பு நிகழ்ச்சித்திட்ட முகாம் (Fielding Camp) ஒன்றினை ஒழுங்கு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















