போட்டித் தடைக்குப் பிறகு ரஞ்சிக் கிண்ணத்தில் ஸ்ரீசாந்த்

224

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த்திற்கு கிரிக்கெட் விளையாட விதிக்கப்பட்டிருந்த தடை, எதிர்வரும் செப்டம்பர் மாதத்துடன் முடிவுக்கு வருகிறது.  

இதன்படி, சூதாட்டம் காரணமாக விதிக்கப்பட்ட தடைக்காலம் முடிவுக்கு வருவதால் ஸ்ரீசாந்தை கேரள கிரிக்கெட் அணியில் இணைத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய அணிக்கு பயிற்சியளிக்கத் தயார்: அசாருதீன்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளரான கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீசாந்த் கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற .பி.எல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக விளையாடும் போது, ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டதாக டெல்லி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.  

இதையடுத்து இந்திய கிரிக்கெட் சபை ஸ்ரீசாந்த்துக்கு ஆயுட்கால தடை விதித்தது. சூதாட்ட வழக்கு குறித்து விசாரணை நடத்திய டெல்லி சிறப்பு நீதிமன்றம் 2015ஆம் ஆண்டில் ஸ்ரீசாந்த்தை விடுதலை செய்து உத்தரவிட்டது.  

ஆனாலும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கையாக எடுக்கப்பட்ட ஆயுட்கால தடையை நீக்க இந்திய கிரிக்கெட் சபை மறுத்தது. இதனால் ஸ்ரீசாந்த் தன் மீதான தடையை நீக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தை நாடினார்

இந்த மனுவை விசாரித்த அந்நாட்டு உயர்நீதிமன்றம் ஸ்ரீசாந்த்துக்கு விதிக்கப்பட்ட தண்டனை காலத்தை குறைப்பது குறித்து இந்திய கிரிக்கெட் சபை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.  

இதன் பின்னர் இந்திய கிரிக்கெட் சபையின் நன்னடத்தை அதிகாரியான ஓய்வு பெற்ற நீதிபதி டி.கே.ஜெயின் விசாரணை நடத்தி ஸ்ரீசாந்த்தின் தண்டனை காலம் குறைக்கப்படுவதாக அறிவித்தார். இதன்படி, அவரது தடைக்காலம் எதிர்வரும் செப்டம்பர் மாதத்துடன் முடிவுக்கு வருகிறது.   

இந்த நிலையில், நீதிமன்றத்தை நாடி வாழ்நாள் தடையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ள ஸ்ரீசாந்த், இம்முறை ரஞ்சி கிண்ணத்தில் கேரள அணிக்காக விளையாட உள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது

கேரள கிரிக்கெட் சங்கம் ஸ்ரீசாந்த் தொடர்பாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும், ஸ்ரீசாந்த் நிச்சயம் கேரள அணியில் இடம்பெறுவார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, ஸ்ரீசாந்த்தின் உடல் தகுதியை பொறுத்து அணியில் இடம் பெறுவது முடிவாகும் என்று கேரள அணியின் புதிய பயிற்சியாளர் டினு யோஹன்னன் கூறியுள்ளார்.

2011 உலகக் கிண்ணத்தில் ஆட்ட நிர்ணயம் – முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், செப்டம்பர் மாதம் ஸ்ரீசாந்த்தின் தடைக் காலம் முடிவுக்கு வருகிறது. அதற்குள் அவர் விளையாட வாய்ப்பிருக்கிறது. அவரின் பந்துவீச்சிலும், உடற்தகுதியிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அவரின் திறன் மற்றும் உடற்தகுதியை மதிப்பிட வேண்டிய தேவை உள்ளது

அதே நேரத்தில் அவர் 7 வருடங்களாக கிரிக்கெட் விளையாடவில்லை. அதனால் அது குறித்து மதிப்பிட வேண்டிய கட்டாயம் உள்ளது. அவர் மீண்டும் கேரள அணிக்குத் திரும்பினால் மகிழ்ச்சி.

ஸ்ரீசாந்த், மீண்டும் கிரிக்கெட் விளையாடும் அளவுக்கு உடற் தகுதியை நிரூபிக்கும் பட்சத்தில் அவரை அணியில் சேர்த்துக் கொள்வது பற்றி யோசிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.  

இதுஇவ்வாறிருக்க, கேரள கிரிக்கெட் அணிக்காக விளையாடுவது குறித்து ஸ்ரீசாந்த் கருத்து வெளியிடுகையில்

“எனக்கு வாய்ப்பளிக்கும் கேரள கிரிக்கெட் சங்கத்துக்கு உண்மையிலேயே நான் கடமைப்பட்டு இருக்கிறேன். எனது உடல் தகுதியை நிரூபித்து போட்டிக்கு வலுவாக திரும்புவேன்

கேரள கிரிக்கெட் சங்கத்தில் உள்ள அனைவரும் எனக்கு ஆதரவாக உள்ளனர். தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறேன்.  

கேரள அணியில் நான் விளையாடுவதை நீங்கள் எல்லோரும் பார்ப்பீர்கள். நான் விளையாடிய காலத்தில் இருந்ததை விட கிரிக்கெட் நிறைய மாற்றம் கண்டு இருக்கிறது. நாட்டுக்காக விளையாடிய காலங்களை இன்னும் நினைத்து பார்க்கிறேன்” என்றார்

37 வயதான ஸ்ரீசாந்த் 2005 முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்திய அணிக்காக 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 87 விக்கெட்டுக்களையும், 53 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 75 விக்கெட்டுக்களையும், 10 T20i போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி உள்ளார்.  

அத்துடன் அவர் 2007ஆம் ஆண்டு நடைபெற்ற T20i உலகக் கிண்ணம் மற்றும் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ணம் ஆகியவற்றை வென்ற டோனி தலைமையிலான இந்திய அணியில் இடம்பிடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…