தம்புள்ளை அணிக்காக துடுப்பாட்டத்தில் ஜொலித்த குசல் மெண்டிஸ்

483

இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் மாகாண ரீதியிலான “சுபர் 4″  முதல்தர கிரிக்கெட் தொடரின் இரண்டாம் வாரப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (8) ஆரம்பமாகியிருந்தன.

நான்கு நாட்கள் கொண்டதாக நடைபெறுகின்ற இத்தொடரின் முதல் வாரப் போட்டிகள் இரண்டும் சமநிலை அடைந்திருந்தன.

மாகாண கிரிக்கெட் தொடரில் ஜொலித்த தேசிய அணி நட்சத்திரங்கள்

இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் மாகாணங்களுக்கு இடையிலான ” சுபர் – 4 ” …

தேசிய அணி வீரர்களுக்கு பகலிரவு டெஸ்ட் போட்டிகளுக்கு அனுபவத்தினை பெற்றுத்தரும் நோக்கோடு இத்தொடரின் இரண்டாம் வாரப் போட்டிகள் பகலிரவு ஆட்டமாக ஆரம்பமாகியிருக்கின்றது.   

இளம் சிவப்பு நிறப் பந்து பயன்படும் போட்டிகளின் முதல் நாளில் பந்துவீச்சாளர்களின் ஆதிக்கத்தை கூடுதலாக அவதானிக்க முடியுமாக இருந்தது.

காலி எதிர் தம்புள்ளை

தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானத்தில் தொடங்கியிருந்த இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தம்புள்ளை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்திருந்தார்.

இதன்படி முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை குசல் மெண்டிஸ் மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோருடன் தம்புள்ளை அணி ஆரம்பித்தது. தம்புள்ளை அணித் தலைவர் கருணாரத்ன ஓட்டங்கள் சேர்க்க ஆரம்பிக்க முன்னரே இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் தம்மிக்க பிரசாத்தின் பந்துக்கு இரையானர். எனினும், இளம் வீரரான குசல் மெண்டிஸ் தம்புள்ளை அணிக்கு ஓட்டங்கள் சேர்ப்பதை தொடர்ந்தும் முன்னெடுத்தார்.

மெண்டிஸ் தவிர தம்புள்ளை அணிக்கு நம்பிக்கை தரக்கூடிய துடுப்பாட்ட வீரர்களான அஷான் பிரியன்ஞன், சசித்ர சேரசிங்க, மிலிந்த சிறிவர்தன ஆகியோர் பெரிதாக சோபிக்கவில்லை. தொடர்ந்து குசல் மெண்டிசின் அரைச்சத உதவியுடன் தம்புள்ளை அணி 73.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 244 ஓட்டங்களினை முதல் இன்னிங்சுக்காகப் பெற்றிருந்தது.

தம்புள்ளை அணியின் துடுப்பாட்டத்தில் மெண்டிஸ் 12 பெளண்டரிகள் அடங்கலாக 89 ஓட்டங்களினை குவித்திருந்தார். இதேவேளை, காலி அணியின் பந்துவீச்சு சார்பாக சதுரங்க டி சில்வா 3 விக்கெட்டுக்களையும், நிசால் தாரக்க மலிந்த புஷ்பகுமார ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.  

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்டில் துஷ்மன்த சமீர சந்தேகம்

தற்போது நடைபெற்று வரும் மாகாணங்களுக்கு இடையிலான ‘சுப்பர்-4’ கிரிக்கெட் தொடரின் …

இதனை அடுத்து தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த காலி அணி ஆட்டத்தின் முதல் நாள் முடிவில் 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து காணப்படுகின்றது. களத்தில் மாதவ்வ வர்ணபுர 15 ஓட்டங்களுடன் நிற்கின்றார்.

முதல் நாள் சுருக்கம்

தம்புள்ளை அணி – 244 (73.3) குசல் மெண்டிஸ் 89, லஹிரு மதுசங்க 26, சதுரங்க டி சில்வா 31/3

காலி அணி – 38/2 (7.3) மதவ்வ வர்ணபுர 15*

கொழும்பு எதிர் கண்டி

ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் தொடங்கியிருந்த கண்டி மற்றும் கொழும்பு அணிகள் இடையிலான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற கொழும்பு அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் முதலில் கண்டி வீரர்களை துடுப்பாட பணித்திருந்தார்.

கண்டி அணிக்கு ஆரம்ப வீரர்களான தரங்க பரணவிதான, மஹேல உடவத்த ஆகியோர் மோசமான தொடக்கத்தினைத் தந்தனர். எனினும், மத்திய வரிசையில் ஆடிய அணித் தலைவர் நிரோஷன் திக்வெல்ல 38 ஓட்டங்களுடன் அணியினை கட்டியெழுப்பினார்.

இங்கிலாந்து உள்ளக கிரிக்கெட் அணியை வைட் வொஷ் செய்த இலங்கை

இலங்கை மற்றும் இங்கிலாந்து உள்ளக கிரிக்கெட் (Indoor) அணிகளுக்கு …

அதோடு சரித் அசலங்க, பிரியமல் பெரேரா ஆகியோரும் தங்கள் பங்குக்கு அரைச்சதம் விளாசி கண்டி அணிக்கு வலுச்சேர்த்தனர். இவர்களின் துடுப்பாட்ட உதவியோடு கண்டி வீரர்கள் 77.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 277 ஓட்டங்களினை முதல் இன்னிங்சுக்காக குவித்திருந்தனர்.

கண்டி அணியின் சார்பில் பிரியமல் பெரேரா 79 ஓட்டங்களினையும், சரித் அசலன்க 57 ஓட்டங்களினையும் பெற்றிருந்தனர்.

கொழும்பு அணியின் பந்துவீச்சில் சுழல் வீரரான வனிது ஹஸரங்க 40 ஓட்டங்களினை மாத்திரம் விட்டுத்தந்து 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

இதன் பின்னர், தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடங்கிய கொழும்பு அணி 38 ஓட்டங்களுக்கு விக்கெட் இழப்புக்கள் ஏதுமின்றி காணப்பட்டிருந்த போது முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. களத்தில் ஷெஹான் ஜயசூரிய 18 ஓட்டங்களுடனும், கெளசால் சில்வா 9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது நிற்கின்றனர்.

முதல் நாள் சுருக்கம்

கண்டி அணி – 270 (77.1) பிரியமல் பெரேரா 79, சரித் அசலன்க 57, நிரோஷன் திக்வெல்ல 38, வனிது ஹஸரங்க 40/4

கொழும்பு அணி – 37/0 (10) ஷெஹான் ஜெயசூரிய 18*, கெளசால் சில்வா 9*

இந்த இரண்டு போட்டிகளினதும் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடரும்.