இங்கிலாந்தின் போட்டிகளுக்கு தொலைக்காட்சி வர்ணனையாளராக சங்கக்கார

597

இந்த ஆண்டின் கோடைகாலத்தில் பாகிஸ்தான், இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் இரு தரப்பு தொடர்களில் விளையாடவிருக்கின்றன. இந்த இரு தரப்பு தொடர்களின் போட்டிகளை உலகம் பூராகவும் நேரடி ஒளிபரப்புச் செய்யும் ஸ்கை ஸ்போர்ட்ஸ் (Sky Sports) நிறுவனம் குறித்த போட்டிகளின் போது தொலைக்காட்சி வர்ணனையாளர்களில் ஒருவராக செயற்பட இலங்கையின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான குமார் சங்கக்காரவை தெரிவு செய்திருக்கின்றது.

இங்கிலாந்தின் போட்டிகளுக்கு வர்ணனை வழங்கச் செல்வதன் மூலம் குமார் சங்கக்கார, ஸ்கை ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு முன்னதாக வர்ணனையாளராக செயற்பட்டு தற்போது அந்த பொறுப்பில் இருந்து விலகியிருக்கும் ஷேன் வோர்னின் இடத்தையும் பிரதியீடு செய்கின்றார்.

சங்கக்கார இதற்கு முன்னர் இங்கிலாந்தில் கடந்த ஆண்டு இடம்பெற்ற சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் போது தொலைக்காட்சி வர்ணனையாளராக கடமையாற்றிய அனுபவத்தைக் கொண்டிருக்கின்றார்.

ஐ.பி.எல் தொடரின் தொலைக்காட்சி வர்ணனையாளராக சங்கக்கார

40 வயதாகும் குமார் சங்கக்கார இங்கிலாந்தின் போட்டிகளுக்கு வர்ணனை வழங்கச் செல்வதால், அவர் இலங்கையில் இடம்பெறவுள்ள லங்கன் பிரீமியர் லீக் (LPL) T20 போட்டிகளில் விளையாடுவதில் சந்தேகம் நிலவுகின்றது. ஏனெனில், லங்கன் பிரீமியர் லீக் போட்டிகள் நடாத்த ஏற்பாடு (ஆகஸ்ட் 18 தொடக்கம் செப்டம்பர் 11 வரை) செய்யப்பட்டிருக்கும் காலப்பகுதியில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரு தரப்பு தொடர் இடம்பெறுகின்றது. எனினும், இலங்கை கிரிக்கெட் சபை லங்கன் பிரீமியர் லீக் போட்டிகளை வெற்றிகரமாக நடாத்த சங்கக்காரவின் பங்களிப்பு தேவை என்பதால் அதனைப் பெற்றுக் கொள்ள தொடர்ந்தும் பேச்சு வார்த்தைகள் நடாத்தி வருகின்றது.

குமார் சங்கக்கார தவிர, ஸ்கை ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இந்தியாவின் ஹர்பஜன் சிங் மற்றும் பாகிஸ்தானின் வசீம் அக்ரம் ஆகியோரையும் ஆசிய நாடுகளில் இருந்து வர்ணனையாளர் பதவிக்கு அழைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து போட்டிகளுக்கான வர்ணனையாளர்கள் குழாம் 

குமார் சங்கக்கார, ரிக்கி பொண்டிங், ஹர்பஜன் சிங், வசிம் அக்ரம், டேவிட் லோய்ட், நசார்  ஹூசைன், மைக்கல் அத்தர்டன், இயன் போத்தம், டேவிட் கவர், மைக்கல் ஹோல்டிங், இஷா குஹா, எபோனி ரெயின்ட் போர்ட் பென்ட்