60 போட்டிகளைக் கொண்ட 9ஆவது இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கட் தொடரின் 20ஆவது போட்டி நேற்று இரவு மொஹாலியில் அமைந்துள்ள பஞ்சாப் கிரிக்கட் சங்க பிந்த்ரா மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் கவ்தம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் அணி மஹேந்திர சிங் டோனி தலைமையிலான றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் அணியை எதிர் கொண்டது. இந்தப் போட்டியின் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் அணியின் தலைவர் கவ்தம் கம்பீர் முதலில் களத்தடுப்பை தீர்மானித்தார்.

இதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கட்டுகளை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றது. றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் அணி சார்பாக அஜின்கியா ரஹானே 52 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 67 ஓட்டங்களையும், ஸ்டீவன் ஸ்மித் 28 பந்துகளில் 31 ஓட்டங்களையும், மஹேந்திர சிங் டோனி ஆட்டம் இழக்காமல் 12 பந்துகளில் 23 ஓட்டங்களையும் பெற்றனர். கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் அணியின் சார்பாகப் பந்து வீச்சில் சுனில் நரேன், சகீப் அல் ஹசன், ராஜகோபால் சதீஷ் மற்றும் உமேஷ் யதவ் ஆகியோர் தலா 1 விக்கட் வீதம் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு 161 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் அணி 19.3 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றது. இதன் மூலம் நயிட் ரைடர்ஸ் அணி 03 பந்துகள் மீதமிருக்க 2 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது. கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் அணியின் சார்பில் சூர்யகுமார் யதவ் 49 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 60 ஓட்டங்களையும், யூசுப் பத்தான் 27 பந்துகளில் 36 ஓட்டங்களையும், என்டர் ரசல் 11 பந்துகளில் 17 ஓட்டங்களையும் பெற்றனர். சுப்பர்ஜையன்ட்ஸ் அணியின் சார்பாக பந்து வீச்சில் திசர பெரேரா, எல்பி மொர்கல் மற்றும் ரஜட் பாதியா ஆகியோர் தலா 2 விக்கட்டுகள் வீதம் கைப்பற்ற முருகன் அஷ்வின் 1 விக்கட்டை கைப்பற்றினார். இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் அணியின் சூர்யகுமார் யதவ் தெரிவு செய்யப்பட்டார்.