மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணையும் ரெய்லி மெர்டித்

IPL 2023

395

அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ரெய்லி மெர்டித் IPL தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்த ஜெய் ரிச்சட்சன் உபாதை காரணமாக அணியிலிருந்து விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக ரெய்லி மெர்டித் இணைக்கப்பட்டுள்ளார்.

ஏலத்தில் வாங்கப்படாத ஜேசன் ரோய் IPL இல் இணைகிறார்

ரெய்லி மெர்டித் அவருக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த இந்திய ரூபாயில் 1.5 கோடி ரூபாவுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரெய்லி மெர்டித் கடந்த ஆண்டும் விளையாடியிருந்தார். கடந்த ஆண்டு 8 போட்டிகளில் விளையாடியிருந்த இவர் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் என்பதுடன், கடந்த பருவகாலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தையும் பிடித்திருந்தது.

ரெய்லி மெர்டித் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த ஆண்டு விளையாடியதுடன், 2021ம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடியிருந்தார்.

அதேநேரம் ரெய்லி மெர்டித்தை அணியில் இணைப்பதற்கு முன்னர் இலங்கை அணி வீரர் துஷ்மந்த சமீரவை இணைப்பதற்கான பேச்சுவார்த்தகைள் இடம்பெற்றிருந்த நிலையில், குறித்த ஒப்பந்தம் சாத்தியமாகவில்லை என மும்பை இந்தியன்ஸ் நிர்வாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களான ஜஸ்ப்ரிட் பும்ரா மற்றும் ஜெய் ரிச்சட்சன் ஆகியோர் உபாதைக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், ஜொப்ரா ஆர்ச்சர், ஜேசன் பெஹ்ரென்ரொப், டுவான் ஜென்சன் மற்றும் கெமரூன் கிரீன் ஆகியோர் வேகப்பந்துவீச்சாளர்களாக இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<