இலங்கை கிரிக்கெட்டின் உற்சாக பான பங்குதாரர்களாகிய ரெட் புல்

86

இலங்கை கிரிக்கெட் அணியின் உத்தியோகபூர்வ உற்சாக பானத்துக்கான பங்குதாரர்களாக ரெட் புல் (Red Bull) நிறுவனம் இணைந்துள்ளது.

ரெட் புல் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 31ம் திகதியிலிருந்து எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் உற்சாக பானத்துக்கான பங்குதாரர்களாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

மீண்டும் பிற்போடப்படும் இலங்கை – பங்களாதேஷ் தொடர்!

இந்த ஒப்பந்தத்தின்படி, ரெட் புல் நிறுவனம் தங்களுடைய பானங்களை, இருதரப்பு தொடர்களின் போது, இரண்டு அணி வீரர்களுக்கும் வழங்கும். அதுமாத்திரமின்றி இலங்கை கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்வதற்கான முதலீடுகளிலும் ரெட்புல் நிறுவனம் இணையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“எமது உற்சாக பான பங்குதாரர்களாக ரெட் புல் நிறுவனம் இணைந்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது. ரெட் புல் நிறவனமானது தொடர்ச்சியாக விளையாட்டு நடவடிக்கைகள் மற்றும் அணிகளை உலகளாவிய ரீதியில் ஊக்குவித்து வருகின்றது” என இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், “ரெட் புல் நாமத்துக்கான சிறந்த மதிப்பினை இந்த ஒப்பந்தம் வழங்கும் என நாம் நம்புகிறோம். அதேநேரம், இந்த கூட்டு இணைப்பானது இலங்கை கிரிக்கெட்டுக்கும் சிறந்த பெறுமதியை தரும் எனவும் நினைக்கிறேன்” என்றார்.

ரெட் புல் நிறுவனத்தின் இந்த ஒப்பந்தத்தின்படி, மைதானம் மற்றும் போட்டிக்கான இடங்களில் ரெட் புல் நிறுவனத்தின் உற்பத்திகளை விற்பனை செய்ய முடியும் என்பதுடன், சந்தைப்படுத்தல் மற்றும் விநியோகங்களை மக்களுக்கு மேற்கொள்ள முடியும்.

இந்தநிலையில் இந்த ஒப்பந்தம் தொடர்பில் இலங்கை அணியின் முன்னாள் வீரரும், ரெட் புல் கெம்பஸ் கிரிக்கெட் தொடரின் சர்வதேச பணிப்பாளருமான ப்ரெண்டன் குருப்பு கருத்து வெளியிடுகையில்,

Video – இந்த ஆண்டு இலங்கையில் சர்வதேச கிரிக்கெட் நடைபெறுமா?

“இலங்கையின் இளம் வீர, வீராங்கனைகளுடன் ரெட் புல் நிறுவனம் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக இணைந்திருந்தது. அதேநேரம், ரெட்புல் கெம்பஸ் கிரிக்கெட் தொடரை சர்வதேச அளவில் வெற்றிகரமான முறையில் நடத்தியிருந்ததுடன், கெம்பஸ் கிரிக்கெட் வீரர்கள் சர்வதேச அளவில் ஜொலிப்பதற்கும் காரணமாகியிருந்தது.

ரெட் புல் நிறுவனம் மற்றும் இலங்கை கிரிக்கெட் ஆகியவை சிறந்த நட்புறவை பேணிவந்ததுடன், மற்றுமொருமுறை பங்குதாரர்களாக இணைந்துள்ளது. இந்த இணைவானது இலங்கை கிரிக்கெட் மற்றும் ரெட் புல் ஆகிய இரண்டு நாமங்களையும் பெறுமதிமிக்கதாக முன்னோக்கி அழைத்துச் செல்லும் என எதிர்பார்க்கிறேன்” என்றார்.

இலங்கை கிரிக்கெட் சபையின் உத்தியோகபூர்வ உற்சாக பான பங்குதாரர்களாக ரெட் புல் நிறுவனம் இணைந்த நிகழ்வு நேற்று (1)  கொழும்பில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<