3ஆவது T20I இயிலிருந்து ராஜித, மதீஷ திடீர் விலகல்

Australia Tour of Sri Lanka 2022

155

இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர் கசுன் ராஜித மற்றும் இளம் வேகப் பந்துவீச்சாளர் மதீஷ பத்திரன ஆகியோர் காயம் காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசியுமான T20I போட்டியில் விளையாடமாட்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இதில் வலைப் பயிற்சியின் போது மதீஷ பத்திரனவின் வலது முழங்கையில் காயம் ஏற்பட்டுள்ளதுடன், கசுன் ராஜிதவின் தொடை தசையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த இருவரும் காயங்களில் இருந்து மீள்வதற்காக தற்போது சிகிச்சைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதுமாத்திரமின்றி, மதீஷ பத்திரனவுக்கு உபாதையிலிருந்து பூரண குணமடைய நான்கு முதல் ஆறு வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எவ்வாறாயினும், இன்று (11) மாலை கண்டி – பல்லேகலவில் நடைபெறவுள்ள அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது T20I போட்டிக்கான இலங்கை அணிக்கு அசித பெர்னாண்டோ மற்றும் புதுமுக வேகப் பந்துவீச்சாளர் பிரமோத் மதுஷான் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட T20i தொடரை
2க்கு 0 என இலங்கை அணி பறிகொடுத்துள்ள நிலையில், ஆறுதல் வெற்றியைப் பெற்றுக்கொள்ளும் குறிக்கோளுடன் பல்லேகலையில் இன்று இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள கடைசி T20I போட்டியை இலங்கை எதிர்கொள்ளவுள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<