நேபாள கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகும் இலங்கையர்

260
USA cricket Twitter

நேபாள கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் புபுது தஸநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு டி.எஸ் சேனநாயக்க கல்லூரியின் பழைய மாணவரான தஸநாயக்க, இலங்கை மற்றும் கனேடிய கிரிக்கெட் அணிகளின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரராக விளையாடியுள்ளார்.

1993-1994 வரையான காலப்பகுதியில் இலங்கைக்காக 11 டெஸ்ட் மற்றும் 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 2005 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் கனடா தேசிய கிரிக்கெட் அணிக்காக விளையாடியிருந்தார்.

அதுமாத்திரமின்றி, 2007-2011 வரை கனடா தேசிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயற்பட்ட அவர், பின்னர் 2011 முதல் 2015 வரை நேபாள தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும் பணியாற்றியிருந்தார்.

அவரது பயிற்றுவிப்பின் கீழ், நேபாள அணி 2014 ஆம் ஆண்டில் பங்களாதேஷில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத்தில் முதல் முறையாக பங்குகொண்டு விளையாடியது.

இதனிடையே, T20 உலகக் கிண்ணத்திற்குப் பிறகு நேபாள கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியை இராஜினாமா செய்த அவர், 2016 முதல் 2019 வரை அமெரிக்க கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பணியாற்றினார்,

இந்த நிலையில், நேபாள கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மீண்டும் இணைந்துகொண்டமை தொடர்பாக புபுது தஸநாயக்க எமது இணையத்தளத்திற்கு வழங்கிய பேட்டியில்,

நேபாளம் தேசிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மீண்டும் இணைந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஐசிசி அல்லாத உறுப்பு நாடுகளில் நேபாளத்தை முன்னணி அணியாகக் கொண்டு வருவதே எனது முதன்மையான குறிக்கோள் என்று அவர் கூறினார்.

முன்னதாக, 2020 ஆம் ஆண்டு வரை, நேபாள கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக டேவ் வட்மோர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் அவர் தனது பதவிக்காலம் முடிவதற்குள் இராஜினாமா செய்தார். இதன்படி, டேவ் வாட்மோரின் இடத்திற்கு புபுது தஸநாயக்கவை நியமிக்க அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<