பங்களாதேஷ் அணிக்கு ஒருநாள் தரவரிசை புள்ளியில் கணிசமான அதிகரிப்பு

156

அயர்லாந்தில் நடைபெற்ற முக்கோண ஒருநாள் தொடரில் வரலாற்று முக்கோண தொடர் வெற்றியை பதிவு செய்த பங்களாதேஷ் அணி புதிய ஒருநாள் அணிகளின் தரவரிசையில் புள்ளிகள் வித்தியாசத்தில் கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளது.

அயர்லாந்து கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டு மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகளின் பங்குபற்றுதலுடன் முக்கோண ஒருநாள் தொடரானது கடந்த வெள்ளிக்கிழமை (17) வெற்றிகரமாக நிறைவடைந்திருந்தது.

மொசாடிக், சர்கார் அபாரம்: வரலாறு படைத்த பங்களாதேஷ் அணி

மேற்கிந்திய தீவுகள் – பங்களாதேஷ் அணிகள் மோதிய முத்தரப்பு…

கடந்த வெள்ளியன்று (17) நடைபெற்ற இறுதிப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற 24 ஓவர்கள் கொண்ட இப்போட்டியில் பங்களாதேஷ் துடுப்பாட்ட வீரர்களின் அதிரடி துடுப்பாட்டம் காரணமாக அவ்வணி கிரிக்கெட் வரலாற்றில் முதலாவது முக்கோண ஒருநாள் தொடர் வெற்றியினை பதிவு செய்திருந்தது.

இவ்வாறு தொடரை கைப்பற்றிய பங்களாதேஷ் அணி புதிய ஒருநாள் அணிகளின் தரவரிசையில் நான்கு தரவரிசை புள்ளிகளை மேலதிகமாக பெற்றுள்ளது. அவ்வணி தற்போது 90 தரவரிசை புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் தொடர்ந்தும் நீடிக்கின்றது.

முக்கோண ஒருநாள் தொடரில் இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்ட அதாவது இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த மேற்கிந்திய தீவுகள் அணியானது மூன்று தரவரிசை புள்ளிகளை இழந்துள்ளது. தற்போது மேற்கிந்திய தீவுகள் அணி 77 தரவரிசை புள்ளிகளுடன் எட்டாமிடத்தில் தொடர்ந்தும் நீடிக்கின்றது.

முக்கோண ஒருநாள் தொடரை ஏற்பாடு செய்து நடாத்திய அயர்லாந்து அணி குறித்த தொடரில் விளையாடிய நான்கு போட்டிகளில் ஒரு போட்டி மழையால் தடைப்பட ஏனைய மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவியிருந்தது. இதன் மூலம் இரண்டு தரவரிசை புள்ளிகளை அயர்லாந்து அணி இழந்திருந்தது.

இந்நிலையில் இன்று (20) வெளியிடப்பட்ட புதிய ஒருநாள் தரவரிசையில் நேற்று (19) நடைபெற்ற அயர்லாந்து – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது. அதன்படி அப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை அயர்லாந்து இலகு வெற்றிகொண்டதன் அடிப்படையில் மூன்று தரவரிசை புள்ளிகளை மேலதிகமாக பெற்றுள்ளது. தற்போது அயர்லாந்து அணி 47 தரவரிசை புள்ளிகளுடன் 12ஆவது இடத்தில் தொடர்ந்தும் நீடிக்கின்றது.

இதேவேளை உலகக்கிண்ண தொடருக்காக இங்கிலாந்து பயணித்துள்ள பாகிஸ்தான் அணி குறித்த தொடர் ஆரம்பமாகுவதற்கு முன்னர் இங்கிலாந்து அணியுடன் இங்கிலாந்தில் வைத்து இருதரப்பு தொடர் ஒன்றில் விளையாடியிருந்தது.

நேற்றுடன் (19) முழுமையாக நிறைவுக்கு வந்திருந்த குறித்த ஒருநாள் தொடரின் முதல் போட்டி மழையினால் தடைப்பட பாகிஸ்தான் அணியை இங்கிலாந்து அணி ‘க்லீன் சுவீப்’ முறையில் 4 – 0 என்ற அடிப்படையில் வீழ்த்தியிருந்தது.

இங்கிலாந்து அணியினுடைய குறித்த தொடர் வெற்றியின் மூலமும் பாகிஸ்தான் அணியினுடைய தொடர் தோல்வியின் மூலமும் புதிய ஒருநாள் அணிகளின் தரவரிசையில் தரவரிசை புள்ளி மாற்றம் நிகழ்ந்துள்ளது. இங்கிலாந்து அணிக்கு இரண்டு தரவரிசை புள்ளிகள் அதிகரித்திருக்கின்ற அதேவேளை தோல்வியை தழுவிய பாகிஸ்தான் அணிக்கு அதே இரண்டு தரவரிசை புள்ளிகள் குறைவடைந்திருக்கின்றது.

பாகிஸ்தான் உலகக் கிண்ண குழாமில் 3 அதிரடி மாற்றங்கள்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் உலகக் கிண்ண குழாமில்…

இந்த மாற்றத்தின் மூலம் இங்கிலாந்து அணி 125 தரவரிசை புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கின்ற அதேவேளை பாகிஸ்தான் அணி 94 தரவரிசை புள்ளிகளுடன் தொடர்ந்தும் ஆறாமிடத்தில் நீடிக்கின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை (17) நிறைவுற்றிருந்த முக்கோண ஒருநாள் தொடர் மற்றும் நேற்றுடன் (19) நிறைவுற்றிருந்த இருதரப்பு ஒருநாள் தொடர் போன்ற இரண்டு ஒருநாள் தொடர்களில் பங்குபற்றிய ஐந்து அணிகளும் தரவரிசையில் முன்னர் காணப்பட்ட அதே நிலையில், அதாவது தரவரிசை நிலையில் மாற்றம் எதுவும் ஏற்படாது காணப்படுகின்றமை விஷேட அம்சமாகும்.

புதிய ஐ.சி.சி ஒருநாள் அணிகளின் தரவரிசை

  1. இங்கிலாந்து – 125 புள்ளிகள்
  2. இந்தியா – 121 புள்ளிகள்
  3. தென்னாபிரிக்கா – 115 புள்ளிகள்
  4. நியூசிலாந்து– 113 புள்ளிகள்
  5. அவுஸ்திரேலியா – 109 புள்ளிகள்
  6. பாகிஸ்தான் – 94 புள்ளிகள்
  7. பங்களாதேஷ் – 90 புள்ளிகள்
  8. மேற்கிந்தியதீவுகள் – 77 புள்ளிகள்
  9. இலங்கை – 76 புள்ளிகள்
  10. ஆப்கானிஸ்தான் – 62 புள்ளிகள்
  11. ஜிம்பாப்வே – 54 புள்ளிகள்
  12. அயர்லாந்து – 47 புள்ளிகள்
  13. ஸ்கொட்லாந்து – 37 புள்ளிகள்
  14. நேபாளம்– 19 புள்ளிகள்
  15. ஐக்கிய அரபு இராச்சியம் – 10 புள்ளிகள்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<