டெஸ்ட் அணித் தலைவர் பொறுப்பில் இருந்து ஷாண்டோ விலகல்

 Bangladesh Tour of Sri Lanka 2025

8

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை பங்களாதேஷ் அணி இழந்த நிலையில், அந்த அணியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ அறிவித்துள்ளார். 

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் T20I தொடர்களிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், காலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியானது சமநிலையில் முடிவடைந்தது 

இந்த நிலையில், கொழும்பில் நேற்று (28) நிறைவுக்கு வந்த 2ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியானது இன்னிங்ஸ் மற்றும் 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்துயது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது 

இந்த நிலையில், இப்போட்டியுடன் பங்களாதேஷ் டெஸ்ட் அணியின் தலைவர் பதவியில் இருந்து நஜ்முல் ஹொசைன்; ஷாண்டோ விலகுவதாக அறிவித்துள்ளார். இலங்கைக்கும் பங்களாதே{க்கும் இடையில் எஸ்.எஸ்.சி. விளையாட்டரங்கில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிவில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது தனது முடிவை ஷன்டோ அறிவித்தார். 

இங்கு அவர் மேலும் பேசுகையில், ‘இதற்கு எந்த தனிப்பட்ட காரணமும் இல்லை, அணியின் முன்னேற்றத்திற்காக நான் இந்த முடிவை எடுத்துள்ளேன். இது அணிக்கு உதவும் என்று நினைக்கிறேன். கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் பங்களாதேஷ் அணியின் ஒரு பகுதியாக இருக்கிறேன். 

சர்வதேச கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களுக்கும் தலைவராக இருப்பது புத்திசாலித்தனம் என்று நான் நினைக்கவில்லை. எமது கிரிக்கெட் சபை இதைப் பற்றி என்ன நினைக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை, அவர்களின் முடிவை நான் ஆதரிப்பேன். ஆனால் இது எனது தனிப்பட்ட முடிவு. மூன்று வெவ்வேறு தலைவர்களுடன் பணியாற்றுவது அணிக்கு கடினமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். மேலும் இதனை உணர்ச்சிவசப்பட்டு எடுத்ததாக யரும் எண்ண வேண்டாம்என்று தெரிவித்துள்ளார் 

முன்னதாக பங்களாதேஷ் அணியின் மூன்று வடிவிலான அணிக்கும் தலைவராக நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ செயல்பட்டு வந்த நிலையில், T20I அணியின் தலைவராக லிட்டன் தாஸும், ஒருநாள் அணியின் தலைவராக மெஹிதி ஹசன் மிராஸும் நியமிக்கப்பட்டனர். இதையடுத்து இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரின் போது பங்களாதேஷ் அணியின் தலைவராக நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ செயல்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் தனது தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் 

2023 நவம்பரில் நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம் பங்களாதேஷ் அணியின் தலைவராக பொறுப்பேற்ற ஷாண்டோ, 14 டெஸ்ட் போட்டிகளில் நான்கு வெற்றிகளைப் பதிவு செய்துள்ளார். இதில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அவரது தலைமையில் பங்களாதேஷ் அணி எஞ்சிய ஒன்பது டெஸ்ட் போட்டிகளில் தோல்வியையும், ஒரு போட்டியை சமநிலையிலும் முடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<