2017ஆம் ஆண்டிற்கான ஆசிய எழுவர் ரக்பி தொடரில் (Asia Sevens Series) பங்கேற்கவுள்ள இலங்கை அணியின் புதிய தலைவராக அனுபவமிக்க ஆட்டக்காரரும், ஹெவலொக் விளையாட்டுக் கழகத்தின் தற்போதைய வீரருமான சுதர்சன முதுதந்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய அணியில் காணப்படும் பலவகை ஆற்றல்களை கொண்ட வீரர்களில் ஒருவரான முதுதந்திரி, இலங்கை எழுவர் ரக்பி அணியின் தலைவராக மாறுவது இம்முறை இரண்டாவது தடவையாகும். 26 வயதாகும் முதுதந்திரி இதற்கு முன்னதாக, 2015 ஆம் ஆண்டின் ஆசிய எழுவர் ரக்பி தொடரில் அப்போதைய தலைவர் பாஸில் மரிஜா இல்லாத காரணத்தினால் இலங்கையை வழிநடாத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் தலைவர், எதிரணியினை தனது சிறப்பான mதாக்குதல் மூலம் கைக்கொள்வதற்காகவும், துரித கதியில் செயற்படுவதற்காகவும் தான் கற்ற புனித தோமியர் கல்லூரியில் 2009 ஆம் மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் பிரபல்யமான ஒருவராக காணப்பட்டிருந்தார். இவ்வாறாக சிறப்பாக செயற்பட்டு வந்த அவருக்கு, 2012 ஆம் ஆண்டில் தேசிய அணியின் சீருடையை அணியும் வாய்ப்பு கிட்டியிருந்தது.
(வலப்பக்கம்) கொழும்பு குதிரைப் பந்தய திடல் மைதானத்தில், பயிற்சிகளில் ஈடுபடும் முதுதந்திரி, இடப்பக்கம் இருப்பவர் ஒமல்கா குணரத்ன
தேசிய அணியில் வாய்ப்பு கிட்டிய பிறகு ஒரு நிரந்தர வீரராக காணப்பட்டிருந்த முதுதந்திரி, தொடர்ச்சியாக தனது ஆற்றல்களை அதன் மூலம் வளர்த்துக்கொண்டு அனுபவமிக்க வீரர்களில் ஒருவராக அனைவராலும் அறியப்பட்டிருந்தார். கடந்த பருவகாலத்திற்கான (2016 ஆம் ஆண்டு) ஆசிய எழுவர் ரக்பி தொடரில் தனது காயம் காரணமாக முதுதந்திரி விளையாடியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், அவருக்கு இவ்வருடத்திற்கான தொடரில் தனது நாட்டிற்கு சேவையாற்ற சிறப்பான சந்தர்ப்பம் ஒன்று கிட்டியுள்ளது.
இலங்கை எழுவர் தேசிய ரக்பி அணியில் நான்கு இளம் வீரர்கள்
2015ஆம் ஆண்டில் முதுதந்திரியினால் தலைமை தாங்கப்பட்டிருந்த இலங்கை எழுவர் ரக்பி அணி, அவ்வருடத்திற்கான ஆசிய எழுவர் ரக்பி தொடரில் மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.
கடந்த வருடத்திற்கான இந்த ரக்பி தொடரில் இலங்கை அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த தனுஷ்க ரன்ஜனிடம் இருந்து பதவியை பெற்றிருக்கும், முதுதந்திரிக்கு தற்போது அதிக பொறுப்புக்கள் கடமையாகியுள்ளன. அத்தோடு, அவர் செப்டெம்பர் மாதம் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் ஹொங்ஹொங் நாட்டில் நடைபெறவுள்ள லீக் ஆட்டங்களில் தன்னால் இயன்றளவு சிறப்பான பங்களிப்புக்களை வழங்கவும் உழைக்க வேண்டியுள்ளது.
இவ்வருடத்திற்கான தொடரில் பங்கேற்கும் இலங்கை எழுவர் ரக்பி அணி, அனுபவமிக்க வீரர்களோடு சில புதிய வீரர்களையும் உள்ளடக்கும், என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தபோதிலும், தொடரில் பங்கேற்கும் வீரர்கள் பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.