ஜேசன் ரோயின் துடுப்பாட்டம் இங்கிலாந்து அணிக்கு பலம் – இயன் மோர்கன்

123
CARDIFF, WALES - JUNE 08: Jason Roy of England leads his team from the field after winning the Group Stage match of the ICC Cricket World Cup 2019 between England and Bangladesh at Cardiff Wales Stadium on June 08, 2019 in Cardiff, Wales. (Photo by Gareth Copley-IDI/IDI via Getty Images)

பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக துடுப்பெடுத்தாடியமை மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்த இங்கிலாந்து அணித் தலைவர் இயன் மோர்கன் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜேசன் ரோய் சதமடித்து அசத்தியது அணிக்கு பலம் சேர்த்திருந்ததாக புகழாரம் சூட்டியுள்ளார்.

உலகக் கிண்ண கிரிக்கெட்டில் பங்களாதேஷ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ஜேசன் ரோய் சதமடித்து அசத்த இங்கிலாந்து அணி 106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஜேசன் ரோயின் அபார துடுப்பாட்டத்தோடு இங்கிலாந்து அணிக்கு வெற்றி

This clip will only be available in Sri Lanka for viewing up to 3 days from the date of upload. உலகக்…

இந்த வெற்றியின் பின், இங்கிலாந்து அணித் தலைவர் இயன் மோர்கன் கருத்து தெரிவிக்கையில்,

”பாகிஸ்தானுக்கு எதிராக நாங்கள் விளையாடியதைக் காட்டிலும் இப்போட்டியில் எமது வீரர்கள் விளையாடிய விதம் ஆறுதல் அளிக்கிறது. கடந்த போட்டிகளை விட இந்தப் போட்டியின் ஆரம்பத்தில் இருந்து எமது வீரர்கள் மிகப் பெரிய முன்னேற்றத்தை அடைந்திருப்பதை காணமுடிந்தது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நாங்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை பறிகொடுத்தோம். ஆனால் இன்றைய போட்டியில் எமது ஆரம்ப விக்கெட்டுக்கான இணைப்பாட்டம் மிகப் பெரிய அடித்தளத்தை இட்டது” என அவர் தெரிவித்தார்.

போட்டியின் ஆரம்பத்திலே முன்னிலை பெறுவது எளிதான விடயம் என்று நான் நினைக்கவில்லை. அதேபோன்று பந்து துடுப்பு மட்டையை நோக்கி வேகமாக வரும் எனவும் நான் நினைக்கவில்லை, முதல் நான்கு அல்லது ஐந்து ஓவர்களில் அதை நாங்கள் அவதானித்தோம். ஜேசன் ரோய் மற்றும் ஜொன்னி பெயர்ஸ்டோவ் ஆகிய இருவரும் நிலைமைகளை சரியான முறையில் மதிப்பிட்டு சிறப்பாக விளையாடியிருந்தனர் என குறிப்பிட்டார்.

இதேநேரம், இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ரோய் போன்ற வீரர்கள் இருப்பது ஆடம்பரம் என தெரிவித்த இயன் மோர்கன், அவ்வறான வீரர்கள் சதமடிக்கும் போது கிரிக்கெட்டை விரும்புகின்ற பொதுமக்கள் அதைப் பற்றி அதிகம் பேசுவார்கள் என தெரிவித்தார்.

அவரும் விதிமுறைகளுக்கு உட்பட்ட ஒரு விதிவிலக்கான வீரர் தான். ஆனால் அவர் தொடர்ந்து அதிக ஓட்டங்களைக் குவித்து வருகிறார். 140 முதல் 180 வரையான அவருடைய சராசரி விகிதத்தைப் பாதுகாப்பது மிகவும் கடினம். ஆனால் அவர் மைதானம் முழுவதும் ஓட்டங்களைக் குவிக்கின்றார். சிறந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு பவுண்டரிகளை நோக்கி பந்தை அடிக்கின்றார். உண்மையில் அவர் அணியில் இருப்பது மிகப் பெரிய பலம் என தெரிவித்தார்.

இந்த நேரத்தில் அவரது மிகப்பெரிய பலம் அவரது மனநிலையாகும். அது என்னுடன் சேர்த்து பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் ஒரு நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடுகின்ற ஒரு முதிர்ச்சியடைந்த சர்வதேச கிரிக்கெட் வீரராக அவர் மாறிவிட்டார். அதை அவரது மனநிலையிலும், துடுப்பாடுகின்ற விதத்திலும் நன்கு அறியமுடியும்.

எனவே, அவர் சர்வதேச கிரிக்கெட்டை ஆரம்பித்தது முதல் தற்போது வரை ஒரு கணிசமான வேறுபாடு அவரிடம் உண்டு என நான் நினைக்கிறேன் என ஜேசன் ரோய் குறித்து அவர் கூறினார்.

*This clip will only be available in Sri Lanka for viewing up to 3 days from the date of upload.

இந்நிலையில், இந்தப் போட்டியில் துடுப்பாடிய போது இடுப்புப் பகுதியில் உபாதைக்குள்ளான ஜோஸ் பட்லர் தொடர்பில் கருத்து வெளியிட்ட மோர்கன், ஜோஸ் பட்லருக்கு ஏற்பட்ட காயம் விரைவில் குணமடைந்துவிடும் என நம்புகிறேன்.

எனினும், அடுத்துவரும் 48 மணிநேரங்களில் அவரை தீவிரமாகக் கண்காணிக்கப் போகின்றோம். எது எவ்வாறாயினும், அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் தீவிரமாக இருக்காது என தான் நம்புவதாக அவர் கூறினார்.

இதேவேளை, பங்களாதேஷ் அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் எதிர்வரும் 11ஆம் திகதி இலங்கையுடன் மோதுகிறது. இங்கிலாந்து அணி 14ஆம் திகதி மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்கிறது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<