9ஆவது ஐ.பி.எல் கிரிக்கட் போட்டித் தொடரின் 29ஆவது போட்டி நேற்று பூனேயில் அமைந்துள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் மஹேந்திர சிங் டோனி தலைமையிலான றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் அணி ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர் கொண்டது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோஹித் ஷர்மா முதலில் றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ்  அணியைத் துடுப்பெடுத்தாட அழைப்புவிடுத்தார்.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் அணி  நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கட்டுகளை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றது. சுப்பர்ஜையன்ட்ஸ் அணி  சார்பில் சௌரப் திவாரி 45 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 57 ஓட்டங்களையும், ஸ்டீவ் ஸ்மித் 23 பந்துகளில் 45 ஓட்டங்களையும், டோனி 24 பந்துகளில் 24  ஓட்டங்களையும் பெற்றனர். மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பாகப் பந்து வீச்சில்  ஜஸ்ப்ரிட் பும்ராஹ் 3 விக்கட்டுகளைக் கைப்பற்ற மெக்லனகஹன்  மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கட் வீதம் கைப்பற்றினர்.

பதிலுக்கு 160 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்கோடு துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 18.3 ஓவர்கள் முடிவில் 2 விக்கட்டுகளை இழந்து 161 ஓட்டங்களைப் பெற்று 9 பந்துகள் மீதமிருக்க  இப்போட்டியில் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் அணியை 8 விக்கட்டுகளால் தோல்வி அடையச்செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பாகத் துடுப்பாட்டத்தில் தலைவர் ரோஹித் ஷர்மா ஆட்டம் இழக்காமல் 60 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்காலக 85 ஓட்டங்களையும், ஜொஸ் பட்லர் ஆட்டம் இழக்காமல் 17 பந்துகளில் 27 ஓட்டங்களையும், அம்பாதி ரயிடு 19 பந்துகளில் 22 ஓட்டங்களையும் பெற்றனர்.  சுப்பர்ஜையன்ட்ஸ் அணியின் சார்பாகப் பந்து வீச்சில் அஷோக் டிண்டா மற்றும் ரவி அஷ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கட் வீதம் வீழ்த்தினர். இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோஹித் ஷர்மா தெரிவு செய்யப்பட்டார்.

மேலும் கிரிக்கட் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்