மக்காவு கால்பந்து சங்கத்தின் தீர்மானத்தை எதிர்த்த அந்நாட்டு தேசிய வீரர்கள்

547
Macau football players quit national team

இலங்கைக்கு எதிரான 2022 பிஃபா உலகக் கிண்ணத்திற்கான பூர்வாங்க தகுதிகாண் போட்டியின் 2ஆம் கட்ட மோதல் குறித்து மக்காவு அரசு மற்றும் மக்காவு கால்பந்து சங்கம் (MFA) தீர்வொன்றைக் காணும் வரை, தமது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவதில் இருந்து மக்காவு தேசிய கால்பந்து அணி வீரர்கள் விலகிக் கொண்டுள்ளனர். 

தனது சொந்த மண்ணில் நடைபெற்ற முதல் கட்ட தகுதிகாண் போட்டியில் இலங்கைக்கு எதிராக மக்காவு அணி 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2ஆம் கட்டப் போட்டி எதிர்வரும் (ஜூன்) 11 ஆம் திகதி இலங்கையில் நடைபெறவிருந்தது. எனினும், இலங்கையின் பாதுகாப்பை காரணம் காட்டி போட்டியை பொது மைதானம் ஒன்றில் நடத்தக் கோரிய மக்காவு கால்பந்து சங்கம் அந்நாட்டு அணியை இலங்கைக்கு அனுப்ப மறுத்துள்ளது. இது பற்றிய அறிவிப்பை கடந்த சனிக்கிழமை (08) MFA தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தது.  

பாதுகாப்பு காரணத்தினால் இலங்கை வர மக்காவு அணி மறுப்பு

எனினும், மக்காவு அணிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு பிஃபா மற்றும் AFC ஒப்புதல் அளித்ததாக குறிப்பிட்ட இலங்கை கால்பந்து சம்மேளனம் (FFSL) 2ஆம் கட்டப் போட்டி திட்டமிட்டபடி இலங்கையில் நடைபெறும் என்று குறிப்பிட்டது.

இந்நிலையில் ஒரு எதிர்பாராத திருப்பமாக மக்காவு தேசிய அணி வீரர்கள் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள விருப்பத்தை வெளியிட்டிருப்பதோடு மக்காவு கால்பந்து சம்மேளனத்தினால் எடுக்கப்பட்ட முடிவுக்கு தமது அதிருப்தியை வெளியிட்டு அணித் தேர்வுகளில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளனர். இவ்வாறு விலகிக்கொள்ளும் வீரர்களில் 24 தேசிய அணி வீரர்கள், 23 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் பதினொருவர் மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட 13 வீரர்கள் உள்ளடங்குகின்றனர்.  

மக்காவு அணியின் பின்கள வீரர் ஒருவரான கா ஹிம் லீ தனது பேஸ்புக் பக்கத்தில் இந்த விடயம் குறித்து கூறியிருப்பதாவது;

“கடந்த காலங்களில் மக்காவு கால்பந்துக்கு மதிப்புக் கிடைக்கவில்லை. இறுதியாக மக்காவு மக்கள், ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு பெருமை சேர்க்க மக்காவு தேசிய அணிக்கு சந்தர்ப்பம் ஒன்று கிடைத்துள்ளது. எமது பிரதான இலக்கை எட்டுவதற்கு முன் எப்போதும் இல்லாத அளவு நாம் நெருங்கினோம். எமது கைகளில் இருந்து அது நழுவிச் செல்வதை தடுக்க நாம் போராடினோம்.  

நாம் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதை அது உறுதி செய்வதாக இல்லை. ஆனால், நாம் அங்கு சென்று இருக்கின்ற 90 நிமிடங்களிலும் எமது இலக்கை எட்டுவதற்கு முயற்சிக்க வேண்டும். மக்காவுவிற்காகவும் எமக்காகவும் எதிர்கால சந்ததிகளுக்காகவும் அது முன்னோக்கியுள்ள முக்கிய படியாக இருக்கும்.    

கீழுள்ள பட்டியலில் இருக்கும் வீரர்கள் இலங்கை சென்று 2ஆம் கட்ட போட்டியில் விளையாடுவதற்கு விரும்புவதோடு MFA மற்றும் RAEM அரச நிர்வாகங்கள் ஏற்று இதனை மேற்கொள்வதற்கான தீர்வொன்றுக்கு பணியாற்ற வேண்டும். இதனை அவர்கள் ஏற்காது எமது கோரிக்கைக்கு அங்கீகாரம் அளிக்காத பட்சத்தில் கீழுள்ள வீரர்கள் தற்போது முதல் மக்காவு தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்த மாட்டார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.   

தேசிய அணி வீரர்கள்

கொங் சென் ஹு, நிகொலஸ் டொர்ரோ, லாம் ந்கய் டொங், சான் பாக் சுன், ஹொ மான் பய், லீ கெங் பென், லீ காஹிம், காம் சீ ஹு, யூ வாய் சோன், பொங் சி ஹங், சோரஸ், லியாம் கா பூ, சான் மான், ந்ங் வாகெங், ந்ங் வா செங், ஹோ மான் சூ, வொங் வெர்னொன், பங் சீ ஹங், ஹோ கா செங், லாம் சா செங், சொங் ஹொய் சன், லியொங் கா ஹொங், பிலிப் டுவார்ட், லீ சி கின்

பந்துவீச்சாளர்களின் அபாரத்தால் வெற்றி பெற்றோம் – கேன் வில்லியம்சன்

23 வயதுக்கு உட்பட்ட வீரர்கள்

சூ சிட், சென் கா சொன், வொங் டெக் கா, லீ ஹு இன், ஜோர்ஜ் மார்சலோ விட்டோரினோ, லீ சான் டூ, வான் டின் லோ, டாய் லொக் இன், சி டூ செக் ஹங், ஹெய்லொங் வொங், இப் லியொங்   

18 வயதுக்கு உட்பட்ட வீரர்கள்

லொக் வெங் ஹங், சான் ஹங் கிட், வொங் பூ சொன், சீங் கா லொக், கொங் யூ சொன், சியோ ரொங் ருயி, ந்ங் சி ஹு, மான் சக் நாம், லூ சொன் ஹெய், சான் சக் மெங், கு கொய் பாய், வொங் வெங் ஹெய், லியோங் லெக் ஹங்