கோல் கிளேடியேட்டர்ஸ் அணிக்கு புதிய தலைவர்

592

இந்த ஆண்டு நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் மூன்றாவது பருவகால போட்டிகளில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் புதிய தலைவராக குசல் மெண்டிஸ் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>> கண்டி பெல்கோன்ஸ் அணியின் தலைவராக ஹஸரங்க நியமனம்!

LPL தொடரின் கடந்த இரு பருவங்களிலும் அணித்தலைவராக செயற்பட்ட பானுக்க ராஜபக்ஷ, இந்த ஆண்டு தம்புள்ளை ஜயன்ட்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கின்றார். இதனால் LPL தொடரின் புதிய பருவத்தில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணிக்கு புதிய தலைவர் ஒருவர் நியமிக்கப்பட எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

அதன்படி குசல் மெண்டிஸ் கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார். LPL தொடரின் கடந்த பருவகாலங்களிலும், கோல் கிளேடியேட்டர்ஸ் அணிக்காக ஆடியிருந்த குசல் மெண்டிஸ் கடந்த ஆண்டில் LPL போட்டிகளில் அதிக ஓட்டங்களை பெற்ற துடுப்பாட்டவீரராகவும் சாதனை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், அண்மைக்காலமாக தொடர்ச்சியாக துடுப்பாட்டத்தில் பிரகாசித்து வரும் குசல் மெண்டிஸ், இம்முறை தனுஷ்க குணத்திலக்கவுடன் இணைந்து கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் முக்கிய துடுப்பாட்ட வீரராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

>> சமநிலை அடைந்த பயிற்சிப் போட்டி

இதேவேளை LPL தொடரின் மூன்றாவது பருவகாலத்திற்கான போட்டிகள் இம்மாதம் 31ஆம் திகதி தொடக்கம் ஒகஸ்ட் மாதம் 21ஆம் திகதி வரை கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய இடங்களில் நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<