IPL போன்ற தொடர்களில் எமது வீரர்கள் விளையாட வேண்டும் – திமுத்

6167
AFP

உலகளாவிய ரீதியில் நடைபெறும் சர்வதேச லீக் போட்டிகளில் இலங்கை அணியின் அதிக வீரர்கள் பங்கேற்பதற்கு, இலங்கை கிரிக்கெட் உதவ வேண்டும் என அணித் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ணத்தில் விளையாடி வரும் இலங்கை அணி தங்களுடைய இறுதி லீக் போட்டியில் இன்று (06) இந்திய அணியை சந்திக்கிறது. எனினும், அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்திருக்கும் இலங்கை அணி உலகக் கிண்ண கனவை தவறவிட்டு நாடு திரும்பவுள்ளது.

இலங்கைக்கு வருகை தரவுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி

தற்போது நடைபெற்று வரும் உலகக் கிண்ண…

முன்னாள் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோரின் ஓய்வுக்கு பின்னர், சிறந்த அனுபவம் மிக்க வீரர்களை உருவாக்குவதற்கு இலங்கை அணி தவறியுள்ளது. இவ்வாறான, நிலையில், இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன, இலங்கை வீரர்கள் ஐ.பி.எல். மற்றும் பிக்பேஷ் (Bigbash) போன்ற சர்வதேச லீக் போட்டிகளில் விளையாடுவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

“எமது நாட்டை பொருத்தவரை உள்நாட்டு போட்டிகளுக்கு ஒரு பருவகாலம் மாத்திரமே உள்ளது. இதனால் வீரர்கள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பு மாத்திரமே வழங்கப்படுகிறது. அதன் மூலமே திறமையான வீரர்களை நாம் அடையாளம் காண்கின்றோம்.

அதுமாத்திரமின்றி உள்நாட்டு மற்றும் சர்வதேச போட்டிகளுக்கு இடையில் உள்ள இடைவெளியை வீரர்கள் அறிந்துக்கொள்வதற்கான அனுபவத்தை வழங்கவேண்டும். அதனால் ஐ.பி.எல். மற்றும் பிக்பேஷ் போன்ற தொடர்களில் இலங்கை வீரர்கள் விளையாடினால் குறித்த சர்வதேச அனுபவத்தை பெற்றுக்கொள்ள முடியும். எனவே, சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். உலகக் கிண்ணத்தின் பின்னர், கிரிக்கெட் சபையிடமிருந்து இந்த விடயத்தை அணித் தலைவராக எதிர்பார்க்கிறேன்” என்றார்.

சர்வதேச நாடுகளின் வீரர்கள் லீக் போட்டிகளில் விளையாடுவதை ஒப்பிட்டு பார்க்கும் போது, இலங்கை அணியின் வீரர்கள் குறித்த தொடர்களில் பங்கேற்பது மிகவும் குறைவாக உள்ளது. குறிப்பாக இறுதியாக நடைபெற்ற ஐ.பி.எல். தொடரிலும் இலங்கை அணியைச் சேர்ந்த லசித் மாலிங்க மாத்திரமே விளையாடியிருந்தார். ஏனைய கிரிக்கெட் அணிகளிலிருந்து மிகவும் அதிகமான வீரர்கள் பங்கேற்றிருந்தனர்.

Photos : CWC19 – Sri Lanka practice session ahead of India match

ThePapare.com | 05/07/2019 Editing and re-using images without permission of ThePapare.com…

இதேவேளை, 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கை அணி உலகக் கிண்ணத்துக்கான குழாத்தினை கட்டியெழுப்ப முயற்சித்த போதும், வீரர்கள் தொடர்ச்சியாக பிரகாசிக்கத் தவறியிருந்தனர். எனினும், அடுத்த உலகக் கிண்ணத்துக்கான சிறந்த திட்டத்துடன் இலங்கை கிரிக்கெட் சபை உள்ளதாகவும், 2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத்தில் சிறந்த 15 பேர்கொண்ட அணியொன்று உருவாகும் எனவும் திமுத் கருணாரத்ன நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ணத்தின் இன்றைய போட்டி லீட்ஸ், ஹெடிங்லி மைதானத்தில் இன்று பிற்பகல் 03.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<