இலங்கை கிரிக்கெட் சபையின் 2024 ஆம் ஆண்டின் அதிசிறந்த கிரிக்கெட் வீரராக கமிந்து மெண்டிஸும், அதிசிறந்த வீராங்கனையாக சமரி அத்தபத்துவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் மகளிர் பிரிவில் வழங்கப்பட்ட ஏழு விருதுகளில் 6 விருதுகளை இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தபத்து தட்டிச் சென்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இலங்கை கிரிக்கெட் சபையினால் நடத்தப்பட்ட 2024க்கான ஹோம் லேண்ட்ஸ் இலங்கை கிரிக்கெட் விருதுகள் விழா நேற்று (09) கொழும்பு சினமன் லைவ் ஹோட்டலில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் 2024ஆம் ஆண்டில் திறமைகளை வெளிப்படுத்திய வீர, வீராங்கனைகள் இந்த விருது விழாவில் கௌரவிக்கப்பட்டதுடன், இதில் இலங்கை கிரிக்கெட் அணியின் இந்நாள், முன்னாள் வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அதன்படி, 2024-ஆம் ஆண்டின் அதிசிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது மற்றும் ஆண்டின் சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரருக்கான விருது ஆகிய 2 முக்கிய விருதுகளை இளம் வீரர் கமிந்து மெண்டிஸ் பெற்றார்.
26 வயதான கமிந்து மெண்டிஸ் கடந்த ஆண்டு 9 டெஸ்ட் போட்டிகளில் 5 சதங்கள், 3 அரைச் சதங்களுடன் 1049 ஓட்டங்களைக் குவித்தார். இதில் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வழங்கப்படும் 2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி விருதுகளில் சிறந்த வளர்ந்து வரும் வீரருக்கான விருதை வென்றெடுத்த கமிந்து மெண்டிஸ், 2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி இன் சிறப்பு டெஸ்ட் அணியிலும் அவர் இடம்பிடித்திருந்தார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி மூலம் 2022இல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர், கடந்த ஆண்டு தான் இலங்கை டெஸ்ட் அணியில் நிலையான இடத்தைப் பிடித்தார். தனது முதல் 8 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக 9 தடவைகள் 50க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அரிய உலக சாதனை ஒன்றை நிலைநாட்டியிருந்தார். இதில் 5 சதங்கள் அடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய ஆற்றல்களை வெளிப்படுத்திய கமிந்து மெண்டிஸ் கடந்த ஆண்டு இரண்டு தடவைகள் மாதத்தின் அதிசிறந்த ஐசிசி கிரிக்கெட் விருதை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2024-ஆம் ஆண்டின் அதிசிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான விருதை சமரி அத்தபத்து தட்டிச் சென்றார். அதுமாத்திரமின்றி, ஆண்டின் சிறந்த ஒருநாள் சகலதுறை வீராங்கனை, சிறந்த ஒருநாள் துடுப்பாட்ட வீராங்கனை, சிறந்த T20I சகலதுறை வீராங்கனை, சிறந்த T20I துடுப்பாட்ட வீராங்கனை மற்றும் சிறந்த T20I பந்துவீச்சாளர் ஆகிய விருதுகளைப் பெற்றார்.
கடந்த ஆண்டு சமரி அத்தபத்து 9 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆடி ஒரு சதம், 2 அரைச் சதங்கள் உட்பட 458 ஓட்டங்களைக் குவித்ததுடன் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இருந்தார். அத்துடன் 21 சர்வதேச T20I கிரிக்கெட் போட்டிகளில் ஆடி 2 சதங்கள், 4 அரைச் சதங்களுடன் 720 ஓட்டங்களைப் பெற்றதுடன் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
இந்த நிலையில், ஆண்டின் அதிசிறந்த டெஸ்ட் சகலதுறை வீரருக்கான விருதை இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தனஞ்சய டி சில்வா பெற்றுக்கொள்ள, ஆண்டின் அதிசிறந்த டெஸ்ட் பந்துவீச்சாளருக்கான விருதை பிரபாத் ஜயசூரிய தனதாக்கிக் கொண்டார்.
இதனிடையே, ஆண்டின் அதிசிறந்த ஒருநாள் துடுப்பாட்ட வீரராக பெதும் நிஸ்ஸங்கவும், அதிசிறந்த ஒருநாள் பந்துவீச்சாளராக வனிந்து ஹசரங்கவும் விருதுகளைப் பெற்றனர். அத்துடன், ஆண்டின் அதிசிறந்த ஒருநாள் சகலதுறை வீரருக்கான விருது சரித் அசலங்கவிற்கு வழங்கப்பட்டது.
இதேவேளை, குசல் மெண்டிஸ் ஆண்டின் அதிசிறந்த T20I துடுப்பாட்ட வீரருக்கான விருதைப் பெற்றுக்கொள்ள, வனிந்து ஹசரங்க ஆண்டின் அதிசிறந்த T20I பந்துவீச்சாளர் மற்றும் ஆண்டின் அதிசிறந்த T20I சகலதுறை வீரர் ஆகிய 2 விருதுகளையும் பெற்றுக்கொண்டார்.
இது இவ்வாறிருக்க, ஆண்டின் வளர்ந்து வரும் வீரருக்கான விருது ஜனித் லியனகேவிற்கு வழங்கப்பட்டது. 2024 ஜனவரி மாதம் தனது ஒருநாள் போட்டியில் அறிமுகமான ஜனித் லியனகே, கடந்த 12 மாதங்களில் 46.20 சராசரியுடன் 462 ஓட்டங்களை எடுத்து இலங்கையின் மத்திய வரிசை துடுப்பாட்டத்தை வலுப்படுத்தியதன் காரணமாக வளர்ந்து வரும் வீரருக்கான விருதை தட்டிச் சென்றுள்ளார்.
உள்ளூர் போட்டிகளை பொறுத்தமட்டில் ஆடவருக்கான மேஜர் கழக T20I தொடரில் அதிசிறந்த வீரராக சகலதுறை வீரர் சாமிக்க கருணாரட்ன தேர்வு செய்யப்பட்டார். அதேபோல, அகில தனஞ்சயவிற்கு அதிசிறந்த பந்துவீச்சாளர் விருதும், பவந்த வீரசிங்கவிற்கு அதிசிறந்த துடுப்பாட்ட வீரர் விருதும் வழங்கப்பட்டது.
மறுபுறத்தில் ஆடவருக்கான மேஜர் கழக ஒருநாள் தொடரில், டில்ஷான் முனவீர, க்ருஷான் சஞ்சுல மற்றும் தனுக தபாரே ஆகியோர் முறையே அதிசிறந்த பந்துவீச்சாளர், அதிசிறந்த துடுப்பாட்ட வீரர் மற்றும் அதிசிறந்த சகலதுறை வீரராக தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும், மேஜர் கழக 3 நாட்கள் தொடரில் டிலும் சுதீர மற்றும் சஹன் கோசல ஆகியோர் அதிசிறந்த பந்துவீச்சாளர் மற்றும் அதிசிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதை தட்டிச்செல்ல, ரவிந்து பெர்னாண்டோ அதிசிறந்த வீரருக்கான விருதைப் பெற்றுக்கொண்டார்.
இந்த நிலையில், மகளிர் பிரிவில் வழங்கப்பட்ட 7 விருதுகளில் 6 விருதுகளை இலங்கை மகளிர் அணியின் தலைவி சமரி அத்தபத்து தட்டிச் செல்ல, ஆண்டின் அதிசிறந்த ஒருநாள் பந்துவீச்சாளராக கவீஷா தில்ஹாரி தேர்வு செய்யப்பட்டார்.
இம்முறை இலங்கை கிரிக்கெட் விருதுகளில் மகளிருக்கான உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் திறமைகளை வெளிப்படுத்தியவர்களுக்கு முதல்முறையாக விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது அதன்படி, மேஜர் கழக மகளிர் அழைப்பு தொடரில் அதிசிறந்த பந்துவீச்சாளராக ரஷ்மி சில்வாவும், அதிசிறந்த துடுப்பாட்ட வீராங்கனையாக ஹர்ஷிதா சமரவிக்ரமவும், அதிசிறந்த சகலதுறை வீராங்கனையாக நிலக்ஷிகா சில்வா தேர்வு செய்யப்பட்டனர்.
இதேவேளை, இம்முறை இலங்கை கிரிக்கெட் விருகளில் ஆண்டின் அதிசிறந்த போட்டி மத்தியஸ்தர் மற்றும் ஆண்டின் அதிசிறந்த நடுவருக்கான முறையே பிரதீப் ஜெயப்பிரகாஷ் மற்றும் சாமர டி சொய்சாவுக்கு வழங்கப்பட்டன. மேலும் பல வாழ்நாள் சாதனையாளர் விருதுகளும் வழங்கப்பட்டன.
விளையாட்டுத்துறை அமைச்சர் சமன் குமார கமகே, ஹோம் லேண்ட்ஸ் நிறுவனங்கள் குழுமத்தின் அதிபர் நலின் ஹேரத், இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா ஆகியோர் பிரதான விருதுளை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<