இங்கிலாந்து அணியின் புதிய தலைவராக ஜோஸ் பட்லர் நியமனம்!

England Cricket

151

இங்கிலாந்து மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட அணியின் புதிய தலைவராக ஜோஸ் பட்லர் நியமிக்கப்பட்டுள்ளார் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணியின் ஒருநாள் மற்றும் T20I அணியின் தலைவராக இயன் மோர்கன் செயற்பட்டுவந்த நிலையில், இந்தவார ஆரம்பத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்திருந்தார்.

இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சுக்கு நெருக்கடி கொடுத்த ஆஸி.!

இயன் மோர்கன் இங்கிலாந்து அணிக்காக 126 ஒருநாள் மற்றும் 72 T20I போட்டிகளில் இங்கிலாந்து அணியை வழிநடத்தியிருந்ததுடன், இங்கிலாந்து அணி இவருடைய தலைமையின் கீழ் முதல் ஐசிசி உலகக்கிண்ணத்தை கடந்த 2019ம் ஆண்டு வெற்றிக்கொண்டிருந்தது.

ஜோஸ் பட்லர் கடந்த 2015ம் ஆண்டு தொடக்கம் இங்கிலாந்து ஒருநாள் மற்றும் T20I  அணியின் உப தலைவராக செயற்பட்டுவந்ததுடன், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் 9 ஒருநாள் மற்றும் 5 T20I போட்டிகளில் இங்கிலாந்து அணியை வழிநடத்தியுள்ளார்.

அதேநேரம், இங்கிலாந்து அணிக்காக 57 டெஸ்ட், 151 ஒருநாள் மற்றும் 88 T20I போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், 9167 ஓட்டங்களை குவித்துள்ளார். அதுமாத்திரமின்றி இங்கிலாந்து அணிக்காக மூன்று வகை கிரிக்கெட்டிலும் சதமடித்த மூன்று வீரர்களில் ஒருவராகவும் பார்க்கப்படுகின்றார்.

முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆயத்தங்கள் தொடர்பில் கூறும் திமுத் கருணாரத்ன!

இங்கிலாந்து அணியானது தற்போதைய தரவரிசையின்படி ஒருநாள் மற்றும் T20I கிரிக்கெட்டில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கும் நிலையில், ஜோஸ் பட்லர் இந்திய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள தொடரில் முதன்முறையாக முழுநேர தலைவராக செயற்படவுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான T20I தொடர் எதிர்வரும் 7ம் திகதி ஆரம்பிக்கவுள்ளதுடன், ஒருநாள் தொடர் எதிர்வரும் 12ம் திகதி ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<