சம்பியனானது சங்கா விளையாடிய ஜமைக்கா அணி

190
cpl

மேற்கிந்தியத் தீவில் கடந்த ஒரு மாத காலமாக கரீபியன் பிரீமியர் லீக் தொடர் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. அதில் கெய்ல் தலைமையிலான ஜமைக்கா தல்லாவாஸ் அணியும், எம்ரிட் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ் அணியும் மோதின.

நாணய சுழற்சியில் வென்ற தல்லாவாஸ் அணித் தலைவர் கெய்ல் முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தார். அதன்படி கயானா அணியின் ஸ்மித், மேடின்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

மேடின்சன் முதல் ஓவரில் ஓட்டம் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த லைன் 7 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். மற்றொரு தொடக்க வீரர் ஸ்மித் 17 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.

4ஆவது வீரராக களம் இறங்கிய சோஹைல் தன்வீர் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து 42 ஓட்டங்கள் எடுத்தார். அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, கயானா அணி 16.1 ஓவர்களில் 93 ஓட்டங்கள் எடுப்பதற்குள் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது. ஜமைக்கா அணி சார்பில் இமாத் வாசிம் 3 விக்கட்டுகளும், சாஹிப் அல் ஹசன், வில்லியம்ஸ் தலா 2 விக்கட்டுகளும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 94 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜமைக்கா அணியின் தலைவர் கெய்ல் மற்றும் வால்டன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

வால்டன் ஒருபுறம் நிதானமாக விளையாட, மறுமுனையில் கெய்ல் வானவேடிக்கை நிகழ்த்தினார். ஜமைக்கா அணியின் ஸ்கோர் 9.4 ஓவர்களில் 79 ஓட்டங்கள் எடுத்திருக்கும்போது கெய்ல், 3 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 54 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து சங்ககார களம் இறங்கினார்.

இந்த ஜோடி 12.5 ஓவர்களில் 95 ஓட்டங்கள் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தது. இதன்மூலம் 2ஆவது முறையாக ஜமைக்கா அணி பிரீமியர் லீக் தொடரை வென்றது. வால்டன் 25 ஓட்டங்களுடனும், சங்ககார 12 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

4 ஓவர்கள் வீசி 21 ஓட்டங்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கட்டுகள் வீ்ழ்த்திய ஜமைக்கா அணியின் இமாத் வாசிம் ஆட்ட நாயகன் விருது பெற்றார். அந்த அணியின் ஆன்ட்ரே ரஸல் தொடர் நாயகன் விருது பெற்றார்.