சுற்றுலா அயர்லாந்து மற்றும் இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நிறைவில் இலங்கை கிரிக்கெட் அணி துடுப்பாட்டம், பந்துவீச்சு என இரண்டிலும் பிரகாசித்து வலுப் பெற்றிருக்கின்றது.
>> தனது கன்னி IPL போட்டியை எதிர்பார்த்து காத்திருக்கும் தசுன் ஷானக்க
காலியில் நடைபெற்று வருகின்ற இந்த டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் நேற்று (16) நிறைவுக்கு வரும் போது இலங்கை தமது முதல் இன்னிங்ஸில் திமுத் – மெண்டிஸ் ஆகியோரின் சத உதவிகளோடு 386 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்த தினேஷ் சந்திமால் 18 ஓட்டங்களுடனும், பிரபாத் ஜயசூரிய 12 ஓட்டங்களுடனும் இருந்தனர்.
இன்று முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை அணி துரித கதியில் பிரபாத் ஜயசூரிய மற்றும் தனன்ஞய டி சில்வா ஆகியோரது விக்கெட்டுக்களைப் பறிகொடுத்தது. இந்த வீரர்களில் பிரபாத் ஜயசூரிய 16 ஓட்டங்களையும், தனன்ஞய டி சில்வா 14 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.
இதன் பின்னர் இலங்கை அணியின் 7ஆம் விக்கெட்டுக்காக தினேஷ் சந்திமால் – சதீர சமரவிக்ரம ஜோடி மிகப் பெரும் இணைப்பாட்டம் ஒன்றை உருவாக்கத் தொடங்கியிருந்தது. இரண்டாம் நாளின் மதிய போசணத்தினை தாண்டி நீடித்த இந்த இணைப்பாட்டம், இரண்டு வீரர்களும் சதம் கடந்த நிலையில் இரண்டாம் நாளின் தேநீர் இடைவேளைக்கு சற்று முன்னர் இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை நிறுத்தும் போது 223 ஓட்டங்களுடன் முடிவுக்கு வந்தது.
அதன்படி இலங்கை அணியானது தினேஷ் சந்திமால் மற்றும் சதீர சமரவிக்ரமவின் இணைப்பாட்டங்களோடு தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை 6 விக்கெட்டுக்களை இழந்து 591 ஓட்டங்கள் பெற்றிருந்த போது இடைநிறுத்தியது.
இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் இறுதிவரை ஆட்டமிழக்காது இருந்த தினேஷ் சந்திமால் தன்னுடைய 14ஆவது டெஸ்ட் சதத்துடன் 12 பௌண்டரிகள் அடங்கலாக 102 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் தனது மீள்வருகைப் போட்டி மூலம் டெஸ்ட் போட்டிகளில் கன்னி சதம் விளாசிய சதீர சமரவிக்ரம 11 பௌண்டரிகள் உடன் 114 பந்துகளில் 104 ஓட்டங்கள் எடுத்திருந்தார். அத்துடன் தினேஷ் சந்திமால் – சதீர சமரவிக்ரமவின் இணைப்பாட்டம் (223 ஓட்டங்கள்) டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணிக்காக 7ஆவது விக்கெட்டுக்கு பெறப்பட்ட அதிகூடிய இணைப்பாட்டமாகவும் பதிவாகியது.
>> திமுத் – மெண்டிஸ் இணைப்பாட்டத்துடன் முதல் நாளில் வலுப்பெற்ற இலங்கை
அயர்லாந்து அணியின் பந்துவீச்சில் கேர்டிஸ் கேம்பர் 02 விக்கெட்டுக்களைச் சாய்க்க, மார்க் அடைர், அண்டி மெக்பிரைன், பென் வைட் மற்றும் ஜோர்ஜ் டொக்ரல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தனர்.
பின்னர் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த அயர்லாந்து அணி விஷ்வ பெர்னாண்டோவின் அபார பந்துவீச்சு காரணமாக ஆரம்பத்திலேயே 04 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. எனினும் அணியின் மூன்றாம் விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த ஜேம்ஸ் மெக்கொல்லம் மற்றும் ஹர்ரி டெக்டர் ஆகிய இருவரும் சிறந்த இணைப்பாட்டம் ஒன்றை அயர்லாந்தின் மூன்றாம் விக்கெட்டுக்காக உருவாக்கியிருந்தனர்.
இரண்டாம் நாளின் தேநீர் இடைவேளையினைத் தொடர்ந்து 70 ஓட்டங்கள் வரை நீடித்த இந்த இணைப்பாட்டம் பிரபாத் ஜயசூரிய ஹர்ரி டெக்டரின் விக்கெட்டினை கைப்பற்ற முடிவுக்கு வந்தது. ஹர்ரி டெக்டர் 34 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இந்த விக்கெட்டினை தொடர்ந்து பிரபாத் ஜயசூரியவின் சுழல் பந்துவீச்சில் அயர்லாந்து அணிக்கு மேலும் அழுத்தம் உருவாக அவ்வணி தடுமாற்றத்தினை எதிர் கொண்டதோடு போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநிறைவில் முதல் இன்னிங்ஸிற்காக 117 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து காணப்படுகின்றது.
இலங்கை அணியினை விட தற்போது 474 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இருக்கும் அயர்லாந்து அணிக்காக களத்தில் ஆட்டமிழக்காது நிற்கும் லோர்கன் டக்கர் 21 ஓட்டங்களுடனும், அண்டி மெக்பிரைன் 05 ஓட்டங்களுடனும் காணப்படுகின்றனர்.
இலங்கை அணியின் இரண்டாம் நாள் பந்துவீச்சில் பிரபாத் ஜயசூரிய 5 விக்கெட்டுக்களையும், விஷ்வ பெர்னாண்டோ 2 விக்கெட்டுக்களையும் சாய்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<