இலங்கை வீரர்களின் அபாரத்தோடு இறுதிப் போட்டியில் சென்னை

604
Gujarat Titans vs Chennai Super Kings

இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) T20 தொடரின் முதல் குவாலிபயைர் போட்டியில் சென்னை சுபர் கிங்ஸ் 15 ஓட்டங்களால் தொடரின் நடப்புச் சம்பியனான குஜராத் டைடன்ஸ் அணியை வீழ்த்தியிருக்கின்றது.

>> LPL தொடருக்காக நேரடி ஒப்பந்தம் செய்யப்பட்ட 20 வீரர்களின் விபரம் வெளியானது

மேலும், இந்த வெற்றியுடன் 10ஆவது முறையாக IPL தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் அணியாக சென்னை சுபர் கிங்ஸ் அணி மாற, போட்டியில் தோல்வியடைந்த குஜராத் டைடன்ஸ் இறுதிப் போட்டிக்கு தெரிவாக இரண்டாவது குவாலிபையர் ஆட்டத்தில் விளையாட வேண்டிய நிர்ப்பந்தம் காணப்படுகின்றது.

சென்னை சுபர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைடன்ஸ் அணிகள் இடையிலான முதல் குவாலிபையர் போட்டியானது செவ்வாய்க்கிழமை (21) சென்னை நகரில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் டைடன்ஸ் அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை சென்னை வீரர்களுக்காக வழங்கியது.

இதன்படி சென்னை சுபர் கிங்ஸ் அணியினர் 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 172 ஓட்டங்கள் எடுத்தனர். அணியின் துடுப்பாட்டத்தில் ருதுராஜ் கய்க்வாட் 44 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 7 பெளண்டரிகள் அடங்கலாக 60 ஓட்டங்கள் பெற்றார். இவரோடு டெவோன் கொன்வோய் 34 பந்துகளில் 40 ஓட்டங்கள் எடுத்தமை குறிப்பிடத்தக்கது.

குஜராத் டைடன்ஸ் அணியின் பந்துவீச்சில் மோஹிட் சர்மா மற்றும் மொஹமட் சமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.

>> உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் இலங்கையின் குழு இதுவா?

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 173 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய குஜராத் டைடன்ஸ் ஆரம்பம் முதலே பறிகொடுத்த விக்கெட்டுக்களின் காரணமாக வெற்றி இலக்கை அடைவதில் தடுமாற்றம் காட்டியிருந்தது.

இதன் பின்னர் குஜராத் டைடன்ஸ் அணிக்காக துடுப்பாட்டத்தில் ரஷீட் கான் போராடிய போதும் அதுவும் வீணாக, இறுதியில் அவ்வணி 20 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 157 ஓட்டங்களுடன் போட்டியில் 15 ஓட்டங்களால் தோல்வியினைத் தழுவியது.

குஜராத் டைடன்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக சுப்மான் கில் 38 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 4 பெளண்டரிகள் அடங்கலாக 42 ஓட்டங்கள் எடுத்தார். இதேநேரம் ரஷீட் கான் 16 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பெளண்டரிகள் அடங்கலாக 30 ஓட்டங்கள் எடுத்தமை குறிப்பிடத்தக்கது.

சென்னை சுபர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சில் இலங்கை வீரர்களான மதீஷ பத்திரன மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகியோரும், தீபக் சஹார் மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகியோரும் தலா 02 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றி தமது தரப்பின் வெற்றியை உறுதி செய்தனர். போட்டியின் ஆட்டநாயகனாக ருதுராஜ் கய்க்வாட் தெரிவானார்.

போட்டியின் சுருக்கம்

சென்னை சுபர் கிங்ஸ் – 172/7 (20) ருதுராஜ் கய்க்வாட் 60(44), டெவோன் கொன்வெய் 40(34), மொஹமட் சமி 28/2(4), மோஹிட் சர்மா 31/2(4)

குஜராத் டைடன்ஸ் – 157 (20) சுப்மான் கில் 42(38), ரவிந்திர ஜடேஜா 18/2(4), மஹீஷ் தீக்ஷன 28/2(4), தீபக் சஹார் 29/2(4), மதீஷ பத்திரன 37/2(4)

முடிவு – சென்னை சுபர் கிங்ஸ் 15 ஓட்டங்களால் வெற்றி

இம்முறை இடம்பெறும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சகல போட்டிகளையும் இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com ஊடாக (இலங்கையில் மாத்திரம்) நேரடியாகப் பார்வையிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<