உலகக் கிண்ணத்துக்காக இந்திய வீரர்களினால் விடுக்கப்பட்ட விசித்திர கோரிக்கை

1018
Indian team requested

உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் போது வாழைப்பழம், ரயில் பயணம் மற்றும் காதலி, மனைவிமாருக்கான அனுமதி போன்ற வசதிகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என இந்திய வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் அடுத்த வருடம் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறவுள்ளது. மொத்தம் 10 அணிகள் மட்டுமே கலந்துகொள்ளும் இந்த தொடருக்கு சிறந்த அணியை கண்டறிவதில் அனைத்து நாடுகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்திய வீரர் கலீல் அஹமட்டுக்கு எச்சரிக்கை விடுத்த ஐசிசி

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர்..

இதுஇவ்வாறிருக்க, ஒருநாள் போட்டிகளில் முதல்நிலை அணியாக வலம்வந்து கொண்டிருக்கின்ற இந்தியாவும் அதற்கான ஏற்பாடுகளை தற்போது இருந்தே செய்து வருகிறது. வீரர்கள் தேர்வு ஒருபுறம் இருக்க உலகக் கிண்ண சுற்றுப்பயணம் மற்றும் அதற்கான ஏற்பாடுகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தற்போது மும்முரமாக செய்து வருகிறது.

இந்த நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக உலகக் கிண்ணம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.  

இதில் இந்திய அணியின் தலைவர் விராத் கோஹ்லி, டெஸ்ட் அணியின் உதவித் தலைவர் அஜிங்கியே ரஹானே, ஒருநாள் மற்றும் டி20 அணியின் உதவித் தலைவர் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்திய அணியின் தலைமை தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  

இந்திய கிரிக்கெட் சபையின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுடன் நடைபெற்ற இக்கூட்டத்தில் 2019 உலகக் கிண்ணம் தொடர் தொடர்பாக பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக இந்தியாவின் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய வீரர்களுக்கு இங்கிலாந்தில் செய்து தர வேண்டிய வசதிகள் குறித்துப் பேசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது

இதில் முதலாவதாக உலகக் கிண்ணத் தொடரில் இந்திய வீரர்களுக்குத் தேவையான வாழைப்பழங்கள் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. முன்னதாக நடைபெற்ற இங்கிலாந்து தொடரில் தங்களுக்குப் போதுமான அளவுக்கு வாழைப்பழங்கள் வழங்கப்படவில்லை எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு, பிசிசிஐ தரப்பில் வீரர்களுக்கு தேவையான பழங்கள் கிடைக்கவில்லை என்றால், அணி முகாமையாளரின் செலவில் பழங்களை வாங்கிக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

அதேபோல, தாங்கள் தங்கும் ஹோட்டலில் உடற்பயிற்சி செய்ய ஜிம் வசதி இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஹோட்டலாக பார்த்து முன்பதிவு செய்யுமாறும் பிசிசிஐக்கு வீரர்களால் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

அதன் பின்னர் இங்கிலாந்தில் ரயில் மூலம் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பி.சி.சி., பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி முதலில் மறுத்துள்ளது. இங்கிலாந்து வீரர்கள் ரயிலில் பயணிக்கிறார்கள் என வீரர்கள் தரப்பில் தெரிவிக்க, ஏதேனும் விரும்பத்தகாத காரியம் நடந்தால் அதற்கு பி.சி.சி. பொறுப்பேற்காது என்ற நிபந்தனையுடன் ரயில் பயணத்துக்கு அனுமதி வழங்கப்பட்டதாம்.

மேலும், உலகக் கிண்ணத் தொடரில் வீரர்களின் மனைவிகள் மற்றும் காதலிகளை தொடர் முழுவதும் உடன் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.  

ஏற்கனவே, மனைவிகள் வீரர்களோடு இருக்கக்கூடாது என பிசிசிஐ இங்கிலாந்து தொடரின் போது வெளியிட்ட உத்தரவை திரும்பப் பெறவேண்டும் என கோஹ்லி கோரிக்கை விடுத்து இருந்தார்.

சச்சினின் உலக சாதனைக்கு மிரட்டல் விடுக்கும் கோஹ்லியின் பத்தாயிரம்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சாதனை 10,000..

அந்த கோரிக்கையை முழுதும் ஏற்காத இந்திய கிரிக்கெட் சபை, கிரிக்கெட் தொடரின் முதல் பத்து நாட்கள் கழித்து மீதமுள்ள நாட்களில் மனைவிகளுடன் வீரர்கள் தங்கிக் கொள்ளலாம் என அனுமதி அளித்தது. அதே சமயம், வீரர்களுடன் அவர்கள் பயணிக்கும் அணிப் பேருந்தில் மனைவிமார் பயணிக்கக் கூடாது என்ற தடை தொடர்ந்து நீடிக்கிறது.   

இதை அடுத்து ஒரு வீரர், இந்திய வீரர்கள் ரயிலில் பயணித்தால் அப்போது மனைவியும் கூட வரலாமா? ஏன வினவப்பட்டுள்ளது. இதில் வீரர்கள் பாதுகாப்பு காரணங்கள் மற்றும் பயண நேரம் உள்ளிட்ட காரணங்களால் ரயிலில் பயணிப்பது என்பது மிக மிக அரிது. அப்படி ஒரு வாய்ப்பு குறைவு எனும் நிலையில், இந்த கேள்வி கேட்கப்பட்டுள்ளது.  

இதுஇவ்வாறிருக்க, அடுத்து நடக்கவிருக்கும் அவுஸ்திரேலிய தொடரில் இந்திய வீரர்களின் மனைவிகளுக்கு பிரத்தியேக பஸ் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, 2019 உலகக் கிண்ணத் தொடரை பொறுத்தவரையில் இந்திய வீரர்களின் மனைவிகளை அனுமதிப்பது குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. முக்கிய தொடர்களில் வீரர்களின் கவனம் சிதறாமல் விளையாட வேண்டியது அவசியம் என நிர்வாகக் குழு தொடர்ந்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<