ராகுல் டிராவிட்டுக்கு திடீர் உடல் நலக்குறைவு

Sri Lanka Tour of India 2022

217

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூருவுக்குத் திரும்பியுள்ளார்.

இலங்கைக்கு எதிராக கடந்த 12ஆம் திகதி நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 2க்கு 0 என கைப்பற்றியது

இந்நிலையில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளரான ராகுல் டிராவிட், திடீர் உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூரு திரும்பியுள்ளார்.

இலங்கை அணியுடனான 2ஆவது ஒருநாள் போட்டி நிறைவடைந்த பிறகு கொல்கத்தாவிலிருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணம் நிறைவடைந்த பிறகு இந்திய அணி பல்வேறு தொடர்களில் இடைவிடாது தொடர்ந்து பங்கேற்று விளையாடி வருகிறது. இதனால் ராகுல் டிராவிட்டுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டிருக்கலாம் என்று முதல் கட்ட தகவல் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், ராகுல் டிராவிட்டுக்கு இரத்த அழுத்தப் பிரச்சனை தான் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சீரான இரத்த அழுத்தம் இல்லாமல் இருந்ததால் டிராவிட்டுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது.

தற்போது பெங்களூருவில் ராகுல் டிராவிட் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். தற்போது அவர் உடல் நலம் சீராகிவிட்டதாகவும் இன்று மாலையோ இல்லை நாளை காலையிலேயோ ராகுல் டிராவிட் இந்திய அணியுடன் திருவனந்தபுரத்தில் கலந்து கொள்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும், கடைசியுமான ஒருநாள் போட்டி நாளை (15) திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<