மேல் மாகாணத்திற்கு அதிர்ச்சி கொடுத்த கிழக்கு வீரர்கள்; தென் மாகாணம் இலகு வெற்றி

305

சுதந்திர கிண்ண கால்பந்து தொடரில் பலமான அணியாக கருதப்பட்ட மேல் மாகாண அணியை 3-0 என கிழக்கு மாகாண அணி இலகுவாக வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்ததுடன், ஊவா மாகாண அணியை தென் மாகாண வீரர்கள் இலகுவாக வீழ்த்தினர்.

கிழக்கு எதிர் மேல்

மாத்தறை கொடவில விளையாட்டுத் தொகுதி மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்ற இந்தப் போட்டியின் முதல் 65 நிமிடங்களும் எந்த கோலும் பெறப்படவில்லை. எனினும், எஞ்சிய 25 நிமிடங்களில் மேல் மாகாணத்திற்கு அதிர்ச்சி காத்திருந்தது.

போட்டியின் 67ஆவது நிமிடத்தில் எதிரணியின் கோல் எல்லைக்கு வெளியில் இடது பக்கத்தில் கிழக்கு மாகாணத்திற்கு கிடைத்த பிரீ கிக்கை ரிப்கான் மொஹமட் பெற்றார். அவரது உதையின்போது பந்து பின்கள வீரர்கள் மற்றும் கோல் காப்பாளருக்கு ஊடாக கம்பங்களுக்குள் செல்ல, முதல் கோல் பதிவானது.

மீண்டும் 85ஆவது நிமிடத்தில் எதிரணியின் மத்திய களத்தில் கிழக்கு மாகாண வீரர்கள் மேற்கொண்ட வேகமான பந்துப் பரிமாற்றங்களின் பின்னர் அணித் தலைவர் மொஹமட் முஸ்தாக் அடுத்த கோலையும் பெற, அடுத்த 4 நிமிடங்களில் இளம் வீரர் முன்ஷிப் அவ்வணிக்கான மூன்றாவது கோலையும் பெற்றுக் கொடுத்தார்.

எனவே, ஆட்ட நிறைவில் 3-0 என வெற்றி பெற்ற கிழக்கு மாகாண வீரர்கள் தமது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளனர்.

முழு நேரம்: கிழக்கு எதிர் மேல்

கோல் பெற்றவர்கள்

கிழக்கு மாகாணம் – ரிப்கான் மொஹமட் 67‘, மொஹமட் முஸ்தாக் 85‘, மொஹமட் முன்ஷிப் 89‘

தெற்கு எதிர் ஊவா  

மாத்தறை கொடவில விளையாட்டுத் தொகுதி மைதானத்தில் இடம்பெற்ற அடுத்த போட்டியில் தென் மாகாண அணிக்கு இரண்டு ஓன் கோல்கள் கிடைக்கப்பெற, ஊவா மாகாண அணிக்கு ஒரு ஓன் கோல் பெறப்பட்டது. தென் மாகாண அணிக்கான அடுத்த கோலை கேஷான் துமிந்து பெற்றுக் கொடுத்தார்.

போட்டி நிறைவில் 3-1 என ஊவா அணியை வீழ்த்திய தென் மாகாண வீரர்கள் தொடரில் தமது மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்தனர். ஊவா மாகாண வீரர்கள் இதுவரை ஒரு வெற்றியை மட்டும் பெற்று ஏனைய அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்தள்ளது.

முழு நேரம்: தெற்கு 3 – 1 ஊவா

கோல் பெற்றவர்கள்

தென் மாகாணம் – பிரபாத் அறுனசிறி 10’(OG), ஷதுர பொன்னப்பெரும் 60’(OG), கேஷான் துமிந்து 75’

ஊவா மாகாணம் – N.ராஜபக்ஷ 30’ (OG)

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<