சுதந்திர கிண்ண இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது வட மாகாண அணி

1392

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் ஏற்பட்டில் இடம்பெறும் மாகாண அணிகளுக்கு இடையிலான சுதந்திர கிண்ண கால்பந்து சுற்றுத் தொடரின் அரையிறுதியில் கிழக்கு மாகாணத்தை வெற்றி கொண்ட வட மாகாண அணி, முதல் அணியாக தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

இரண்டு கட்டங்களாக இடம்பெற்ற அரையிறுதியில் ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற முதல் கட்ட (1st leg) அரையிறுதியில் வட மாகாண வீரர்கள் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தனர்.

இந்த நிலையில், தீர்மானம் மிக்க இரண்டாம் கட்ட அரையிறுதி செவ்வாய்க்கிழமை (01) மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் இடம்பெற்றது. இந்தப் போட்டியில் கிழக்கு மாகாணத்திற்கு வெற்றி கட்டாயமாக இருக்க, வட மாகாண அணிக்கு வெற்றி அல்லது ஒரு சமநிலையான முடிவே போதுமாக இருந்தது.

இந்நிலையில் போட்டியில் சொந்த மைதான வீரர்களான கிழக்கு மாகாண அணியினர் போட்டியில் அதிக ஆதிக்கம் செலுத்தியபோதும் போட்டி நிறைவுவரை கோல்கள் எதனையும் பெறவில்லை.

எனவே, முதல் கட்ட அரையிறுதியில் வெற்றி பெற்றமையினால் அரையிறுதியை 1-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிகொண்ட வட மாகாண வீரர்கள் சுதந்தி ர கிண்ண போட்டித் தொடரில் முதல் அணியாக இறுதிப் போட்டிக்குத் தெரிவாகினர்.

வட மாகாண வீரர்கள் இந்த வெற்றியின் பின்னர், அண்மையில் மாலைதீவுகளில் வைத்து உயிரிழந்த தேசிய அணி வீரராக டக்சன் பியூஸ்லஸை நினைவுகூறும் விதத்தில் அவரது படத்தையும், அவரது நான்காம் இலக்க ஜேர்ஸியையும் வைத்து புகைப்படங்களுக்கு காட்சியளித்தனர்.

முழு நேரம்: வடக்கு 0 – 0 கிழக்கு  

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<