தென்னாபிரிக்க மகளிர் அணியுடன் போராடித் தோற்ற இலங்கை மகளிர்

403

தென்னாபிரிக்க மகளிர் அணியுடனான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை மகளிர் அணி கடைசி ஓவர் வரை போராடிய நிலையில் 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் ஐ.சி.சி. மகளிர் சம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் தென்னாபிரிக்க அணி 2 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டது.

பொசப்ஸ்ரூமில் (Potchefstroom) திங்கட்கிழமை (11) நடைபெற்ற இந்தப் போட்டி மழை காரணமாக 48 ஓவர்களுக்கு வரையறுக்கப்பட்டது. இதில் இலங்கை மகளிர் அணிக்கு 226 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் முக்கிய இடைவெளியில் இலங்கை அணி விக்கெட்டுகளை பறிகொடுத்தபோதும் தேவையான ஓட்டங்களை பெற முடிந்தது.

குறிப்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனை பிரசாதினி வீரக்கொடி 67 பந்துகளில் 47 ஓட்டங்களை பெற்றதோடு மத்தியவரிசையில் சசிகலா சிறிவர்தன 56 பந்துகளில் 49 ஓட்டங்களை பெற்று அரைச்சதத்தை தவறவிட்டார்.

தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரில் இலங்கையின் தோல்வி ஓட்டம் முடிவுக்கு வருமா?

இதன் போது நிலக்ஷி தமயந்தியுடன் இணைந்து சிசிகலா சிறிவர்தன 6 ஆவது விக்கெட்டுக்கு 50 ஓட்டங்களை பெற்று நம்பிக்கை தந்தார். தமயந்தி கடைசி வரை ஆட்டமிழக்காது களத்தில் இருந்து 39 ஓட்டங்களை பெற்றபோதும் அவரால் வெற்றி இலக்கை எட்ட முடியாமல் போனது.

கடைசி ஓவருக்கு இலங்கை மகளிர் அணி வெற்றி பெற 12 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் தமயந்தி மூன்று பந்துகளை வீணடித்ததோடு அந்த ஓவரில் மொத்தம் 4 ஓட்டங்களையே பெற முடிந்தது.

இதனால் இலங்கை மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 48 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 218 ஓட்டங்களை பெற்று 7 ஓட்டங்களால் வெற்றியை தவறவிட்டது.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட தென்னாபிரிக்க அணி சார்பில் அதன் தலைவி டான் வான் நீகர்க் அபார சதம் ஒன்றை பெற்றார். 117 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 5 பௌண்டரிகள் ஒரு சிக்ஸருடன் 102 ஓட்டங்களை குவித்தார்.

அவர் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனை அன்ட்ரி ஸ்டெயினுடன் 117 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துகொண்டார். ஸ்டெயின் 100 பந்துகளில் 75 ஓட்டங்களை பெற்றார்.

இதன் மூலம் தென்னாபிரிக்க மகளிர் அணி 48 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 225 ஓட்டங்களை பெற்றதன் மூலம் இலங்கை மகளிர் அணிக்கு சவாலான வெற்றி இலக்கொன்றை நிர்ணயிக்க முடிந்தது. இலங்கை மகளிர் அணி சார்பில் ஓஷதி ரணசிங்க 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

சதம் பெற்ற தென்னாபிரிக்க அணித்தலைவி நீகர்க் ஆட்ட நாயகியாக தெரிவானார்.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி இதே பொசப்ஸ்ரூமில் எதிர்வரும் வியாழக்கிழமை (14) நடைபெறவுள்ளது. ஏற்கனவே இலங்கை மகளிர் அணி தென்னாபிரிக்காவுடனான டி-20 தொடரை 0-3 என இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.       

ஸ்கோர் விபரம்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<