சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) முதன்முறையாக நடத்தும் 19 வயதின் கீழ் மகளிருக்கான உலகக்கிண்ணத்தொடரின் தொடர் கட்டமைப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஐசிசியின் ஏனைய தொடர்களை விட சற்று வித்தியாசமான முறையில் மகளிருக்கான 19 வயதின் கீழ் உலகக்கிண்ணத்தின் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன.
>> கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் ஹஷிம் அம்லா
அதன்படி மொத்தமாக 16 அணிகள் A, B, C மற்றும் D என நான்கு குழுக்களாக வகுக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஒவ்வொரு குழுவிலிருந்தும் 3 அணிகள் சுபர் 6 சுற்றுக்காக தெரிவுசெய்யப்பட்டன.
சுபர் 6 சுற்றில் குழு 1 மற்றும் குழு 2 என இரண்டு குழுக்கள் வகுக்கப்பட்டதுடன், இதில் குழு A மற்றும் குழு D யிலிருந்து முன்னேறிய அணிகள் சுபர் 6 சுற்றின் குழு ஒன்றில் இடம்பெறும். அதேநேரம் B மற்றும் C குழுக்களிலிருந்து முன்னேறும் அணிகள் சுபர் 6 சுற்றில் குழு 2 இல் இடம்பெறும்.
இவ்வாறு சுபர் 6 சுற்றுக்கும் முன்னேறும் 12 அணிகளுடைய முதல் சுற்று வெற்றித்தோல்விகள் மற்றும் ஓட்ட விகிதங்கள் சுபர் 6 சுற்றுக்கு செல்லுபடியாகும். அதன்படியே குழு 1 மற்றும் குழு 2 இல் அணிகள் வரிசைப்படுத்தப்படும்.
சுபர் 6 சுற்றில் ஒரு குழுவில் 6 அணிகள் இடம்பெற்றிருந்தாலும், இரண்டு அணிகளுடன் மாத்திரமே ஒரு அணியால் மோதமுடியும். குறித்த போட்டிகள் குழுவின் தரவரிசையின் அடிப்படையில் முடிவுசெய்யப்படும்.
உதாரணமாக இலங்கை அணி A குழுவில் ஒரு வெற்றியுடன் மூன்றாவது இடத்தை பிடித்துக்கொண்டது. இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் குழு D இல் முறையே முதலிரண்டு இடங்களை பிடித்துக்கொண்டன. எனவே இலங்கை அணியானது குழு D யில் முதலிரண்டு இடங்களை பிடித்துக்கொண்ட அணிகளுடன் மோதவேண்டும்.
அதேநேரம் பங்களாதேஷ் அணி A குழுவில் மூன்று வெற்றிகளுடன் முதலிடத்தை பிடித்துக்கொண்டதால், D குழுவில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்துக்கொண்ட தென்னாபிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அணிகளை எதிர்கொள்ளவேண்டும்.
இவ்வாறு நடைபெறும் சுபர் 6 சுற்றிலிருந்து குழு 1 மற்றும் குழு 2 இல் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும். சுபர் 6 சுற்றில் அணிகளின் புள்ளிகள் சமநிலையாக இருக்கும் பட்சத்தில் ஒட்டுமொத்த வெற்றிகளின் அடிப்படையில் அரையிறுதிக்கு அணிகள் தகுதிபெறும். வெற்றிகளும் சமனிலையாக இருந்தால் மாத்திரமே ஓட்டவேகத்தின் அடிப்படையில் அரையிறுதிக்கு அணிகள் தேர்வுசெய்யப்படும் என ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<