LPL தொடரில் ஆதிக்கத்தை செலுத்துமா கோல் க்ளேடியேட்டர்ஸ்?

Lanka Premier League 2020 – Coverage powered by My Cola

302

லங்கா ப்ரீமியர் லீக்கில் விளைாடும் கோல் க்ளேடியேட்டர்ஸ் அணி, சர்வதேச T20 லீக் போட்டிகளில் விளையாடிய அனுபம் கொண்ட வெளிநாட்டு வீரர்கள் மற்றும் உள்ளூரில் முன்னணி வீரர்களை இணைத்து பலம் மிக்க குழாத்தை உருவாக்கியுள்ளது. 

மிகவும் இன்னலான காலப்பகுதிக்கு மத்தியில் சகலவித ஏற்பாடுகளையும் கோல் க்ளேடியேட்டர்ஸ் அணி ஏற்பாடு செய்துள்ள நிலையில், அவர்களது அணித்தலைரவான பாகிஸ்தானின் சஹீட் அப்ரிடி நேற்றைய தினம் (24) இலங்கை வந்தடைந்தார். எனினும் அவர் இன்னும் குழாத்துடன் இணைவில்லை. இதனால், முதலிரண்டு போட்டிகளின் அணித்தலைவராக பானுக ராஜபக்ஷ செயற்படவுள்ளதுடன், அடுத்தடுத்த போட்களில் அப்ரிடி இணைந்துகொள்வார்.

LPL அழுத்தத்தினை உள்வாங்க தயாராகும் தம்புள்ள வைகிங்

பாகிஸ்தானின் கராச்சியை சேர்ந்த தொழிலதிபரான நதீம் ஒமர், கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியை வாங்கியுள்ளார். அத்துடன், க்ளேடியேட்டர்ஸ் என்ற பெயரில் இவர், பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் குவெட்டா க்ளேடியேட்டர்ஸ் மற்றும் டுபாய் T10 லீக்கின் டெக்கன் க்ளேடியேட்டர்ஸ் அணிகளின் உரிமையாளராகவும் இருந்து வருகின்றார். 

கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக, முன்னாள் பாகிஸ்தான் வீரர், பயிற்றுவிப்பாளர் மற்றும் குவெட்டா க்ளேடியேட்டர்ஸ் அணியின் தற்போதைய பயிற்றுவிப்பாளரான மொயின் கான் செயற்படவுள்ளார். 

கோல் க்ளேடியேட்டர்ஸ் அணி

துடுப்பாட்ட வீரர்கள் – பானுக ராஜபக்ஷ, தனுஷ்க குணதிலக்க, செட்விக் வோல்டன், ஹஸ்ரதுல்லாஹ் சஷாய், அஸான் அலி, அஷாம் கான், சொஹான் ஆராச்சிகே*

சகலதுரைற வீரர்கள் – சஹீட் அப்ரிடி (தலைவர்), மிலிந்த சிறிவர்தன, செஹான் ஜயசூரிய, அப்துல் நஸீர், தனன்ஜய லக்ஷான்*, சானக ருவான்சிறி*

பந்துவீச்சாளர்கள் – அகில தனன்ஜய, லக்ஷான் சந்தகன், அசித பெர்னாண்டோ, மொஹமட் அமீர், நுவான் துஷார, மொஹமட் சிராஸ், வகாஸ் மக்சூட், துவிந்து திலகரட்ன*

(*துணை வீரர்கள்)

கோல் க்ளேடியேட்டர்ஸ் அணி, தங்களுடைய முதல் 7 வீரர்களில் மிகச்சிறந்த T20 வீரர்களை கொண்டுள்ளது. குறிப்பாக இலங்கை தேசிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக செயற்படக்கூடிய தனுஷ்க குணதிலக்க, பானுக ராஜபக்ஷ ஆகியோர், மூன்றாவது வீரராக செஹான் ஜயசூரிய என பலமிக்க உள்ளூர் வீரர்களை உள்ளடக்கியுள்ளது. இதில், தேசிய அணியின் சகலதுறை வீரரான மிலிந்த சிறிவர்தனவும் இணைக்கப்பட்டுள்ளார். குணதிலக்க மற்றும் செஹான் ஜயசூரிய ஆகியோர் சுழல் பந்துவீச்சிலும் அணிக்கு பலம் சேர்க்கக்கூடியவர்கள்.

அதிரடி துடுப்பாட்டத்தை எடுத்துக்கொள்ளும் போது, ஆப்கானிஸ்தான் அணியின் ஹஸ்ரதுல்லாஹ் சஷாய் எதிரணிக்கு சவால் கொடுக்கக்கூயவர். அயர்லாந்து அணிக்கெதிராக கடந்த வருடம் நடைபெற்ற போட்டியில் வெறும் 68 பந்துகளில் 162 ஒட்டங்களை விளாசியிருந்தார். இவருடன், பாகிஸ்தானின் புதுமுக இளம் வீரரான அஷாம் கான் வேகமாக ஓட்டங்களை விளாசக்கூடியவர் என்ற நன்மதிப்பை பெற்றிருக்கிறார். 

Video – LPL ஐ நடத்துவதில் இலங்கைக்கு என்ன பலன்? | Ravin Wickramaratne – நேர்காணல்

இவர்களுடன் மேற்கிந்திய தீவுகளின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் செட்விக் வோல்டன் அனுபவமிக்க துடுப்பாட்ட வீரராக உள்ளார். கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியின் மத்திய வரிசை துடுப்பாட்டத்தில் அவர் அணிக்கு நம்பிக்கை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அத்துடன், முக்கியமாக கோல் க்ளேடியேட்டர்ஸ் அணிக்கு ஒட்டுமொத்த அனுபவத்தையும் கொடுக்கக்கூடியவர் அணித்தலைவர் சஹீட் அப்ரிடி. இவர், தற்போது பந்துவீச்சில் அதிகமான திறமையை வெளிப்படுத்தினாலும், இவரின் அதிரடி துடுப்பாட்டம் வெளியாகும் பட்சத்தில், இந்த அணிக்கு பின்வரிசை துடுப்பாட்டத்தில் எந்தவொரு சிக்கலும் இருக்க வாய்ப்பில்லை.

கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியின் பந்துவீச்சை பார்க்கும் போது, இலங்கையின் அனுபமிக்க வேகப் பந்துவீச்சசாளரான லசித் மாலிங்கவின் வெளியேற்றத்துக்கு பின்னர், ஒட்டுமொத்த பந்துவீச்சையும் மொஹமட் அமீர் தாங்கிப் பிடிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

மொஹமட் அமீரை தவிர்த்து இலங்கை அணியின் அசித பெர்னாண்டோ மற்றும் பாகிஸ்தானின் வகாஸ் மக்சூட் ஆகியோர் தலா ஒரு சர்வதேச போட்டியில் மாத்திரமே விளையாடிய வீரர்களாக உள்ளனர். இதன் காரணமாக அணித்தலைவர் சஹீட் அப்ரிடியுடன், கட்டாயமாக ஒரு வெளிநாட்டு வேகப் பந்துவீச்சாளரை இணைக்கவேண்டிய தேவை கோல் க்ளேடியேட்டர்ஸ் அணிக்கு உள்ளது.  

அதேநேரம், தடைக்கு பின்னர் இலங்கை அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சாளர்களில் ஒருவரான அகில தனன்ஜய இணைந்துள்ளார். மொஹமட் அமீர் மற்றும் சயீட் அப்ரிடி ஆகியோருக்கு அடுத்தப்படியாக விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய திறமை அகில தனன்ஜயவுக்கு உள்ளது. ஆனால், பந்துவீச்சு பாணியை மாற்றிய பின்னர் களமிறங்குவதால், இவரின் பந்துவீச்சு எந்த அளவிற்கு சவாலானதாக அமையும் என்ற கேள்வி எழும்பியுள்ளது. 

Video – LPL தொடரின் ஏற்பாடுகள் பூர்த்தியா? Ravin Wickramaratne – நேர்காணல்

ஹம்பாந்தோட்டை மைதானம் நீண்டதூர பௌண்டரி எல்லையை கொண்டிருப்பதால், லக்ஷான் சந்தகனும் காலி க்ளேடியேட்டர்ஸ் அணிக்கு அதிர்ஷடம் கொண்ட பந்துவீச்சாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவரின் சைனமென் பந்துவீச்சு பாணி, எதிரணி துடுப்பாட்ட வீரர்களுக்கு சவாலாக அமையலாம்.

கோல் க்ளேடியேட்டர்ஸ் அணி அதிகமாக துடுப்பாட்ட வீரர்களை சார்ந்திருக்கிறது. எனவே, T20 போட்டிகளுக்கு ஏற்ற துடுப்பாட்ட வீரர்கள், கோல் க்ளேடியேட்டர்ஸ் அணி கிண்ணத்தை வெல்வதற்கு காரணமாக மாறுவார்களா? என பொருத்திருந்ததுதான் பார்க்க வேண்டும். 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<