டு ப்ளெசிசுக்கு போட்டித்தடை விதித்தது ஐ.சி.சி

360

உரிய நேரத்திற்குள் பந்துவீசாததன் காரணமாக தென்னாபிரிக்க அணிக்கும் அதன் தலைவருக்கும் ஐ.சி.சி அபராதம் விதித்துள்ளது. மேலும் 12 மாதங்களுக்குள் மீண்டுமொரு முறை அதே தவறை செய்ததன் காரணமாக பாப் டு ப்ளெசிசுக்கு ஒரு போட்டித்தடையும் ஐ.சி.சி இனால் விதிக்கப்பட்டுள்ளது.

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் போன்றவற்றில் விளையாடுவதற்காக தென்னாபிரிக்காவுக்கு நீண்டநாள் சுற்றுப்பயணம் ஒன்றினை பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணி மேற்கொண்டுள்ளது.

பாகிஸ்தானை வேகத்தால் மிரட்டி டெஸ்ட் தொடரை கைப்பற்றிய தென்னாபிரிக்கா

சுற்றுப்பயணத்தின் முதல் தொடரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் தென்னாபிரிக்க அணி 2-0 எனும் அடிப்படையில் முன்னிலை பெற்றுள்ளது.

டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி கடந்த வியாழக்கிழமை (03) கேப்டவுணில் ஆரம்பமாகி இன்று (06) நான்கு நாட்களுடன் நிறைவுக்கு வந்திருந்தது. குறித்த டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இலகு வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றிருந்தாலும், ஐ.சி.சி இனுடைய சட்டங்களுக்கு அமைவாக செயற்படாததன் காரணமாக அணியின் தலைவர் பாப் டு ப்ளெசிஸ் உட்பட ஏனைய பத்து வீரர்களுக்கும் ஐ.சி.சி அபராதம் விதித்துள்ளது.

மேலும் அணியின் தலைவரான பாப் டு ப்ளெசிசுக்கு ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாட ஐ.சி.சி தடை விதித்துள்ளது. இதன் மூலம் எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறவுள்ள பாகிஸ்தான் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது தென்னாபிரிக்க அணியானது தங்களுக்கு பந்துவீசுவதற்காக வழங்கப்பட்ட நேரத்திற்குள் ஒரு ஓவரினை குறைவாக வீசியுள்ளனர். இதன் காரணமாக குறித்த ஒரு ஓவரையும் வீசுவதற்கு மேலதிக நேரம் தேவைப்பட்டிருந்தது.

ஐ.சி.சி இனுடைய இலக்கம் 2.22.1 சரத்தில் குறிப்பிடும் அணித்தலைவர்கள் மற்றும் வீரர்களினுடைய நடத்தை மற்றும் அவர்கள் சார்ந்த கோட்பாடுகளை உள்ளடக்கும் சரத்தின்படி இவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே ஒரு ஓவருக்கு வீரர்களின் போட்டி ஊதியத்திலிருந்து 10 சதவீதம் என்ற அடிப்படையிலும் குறித்த அணியின் தலைவருக்கு அதன் இரட்டிப்பு அபராதம் என்ற அடிப்படையிலும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் அணியின் தலைவராக செயற்பட்ட பாப் டு ப்ளெசிசுக்கு போட்டி ஊதியத்திலிருந்து 20 சதவீத அபராத தொகையும், போட்டியில் விளையாடிய ஏனைய பத்து வீரர்களுக்கும் போட்டி ஊதியத்திலிருந்து 10 சதவீதமும் என்ற அடிப்படையில் ஐ.சி.சி இனால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வெற்றியை நெருங்கியிருக்கும் இலங்கை A கிரிக்கெட் அணி

ஐ.சி.சி இனுடைய குறித்த சரத்தில் உள்ளடங்கும் விதிமுறைகளின் பிராகாரம் இவ்வாறு குறைந்தபட்ச பந்துவீச்சு பிரதியை மேற்கொள்ளும் அணியின் தலைவர் குறித்த அபராதம் விதிக்கப்பட்ட தினத்திலிருந்து ஒரு வருடங்களுக்குள் அதாவாது 12 மாதங்களுக்குள் மீண்டுமொரு முறை அணித்தலைவராக இதே குறைந்தபட்ச பந்துவீச்சு பிரதியை பதிவு செய்வாராயின் அவர் போட்டியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்படுவார் என்பதும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் குறித்த சரத்துக்கு சான்றானதொரு சம்பவம் இன்று (06) நிகழ்ந்துள்ளது. கடந்த 2018 ஜனவரி மாதம் 17ஆம் திகதி செஞ்சூரியன் மைதானத்தில் நிறைவுக்கு வந்த இந்திய – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின் போது குறைந்த பந்துவீச்சு பிரதியை பதிவு செய்தார் என்ற காரணத்திற்காக அந்த போட்டியில்  தென்னாபிரிக்க அணியின் தலைவராக செயற்பட்ட பாப் டு ப்ளெசிசுக்கு அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கையும் வழங்கப்பட்டது.

ஆகவே, ஐ.சி.சி வழங்கிய எச்சரிக்கையை இன்னும் 11 நாள்கள் எஞ்சியுள்ள நிலையில் ஒரு வருடத்துக்குள் கடைப்பிடிக்காததன் காரணமாக ஐ.சி.சி பாப் டு ப்ளெசிசுக்கு ஒரு போட்டித்தடையும் விதித்துள்ளது.

குறித்த குற்றச்சாட்டானது போட்டியின் கள நடுவர்களான புரூஸ் ஒக்ஸென்பேர்ட், ஜொய்ல் வில்சன் மற்றும் மூன்றாம் நடுவர் சுந்தரம் ரவி ஆகியோரினால் சுட்டிக்காட்டப்பட குறித்த போட்டியின் மத்தியஸ்தரான டேவிட் பூன் மூலமாக ஐ.சி.சி இனால் இவ்வாறு அபராதமும், பாப் டு ப்ளெசிசுக்கு போட்டித்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<