ஆஸி – இலங்கை தொடர் நடைபெறுவதில் சிக்கல்?

652

நெறிமுறை (Ethical) தொடர்பிலான காரணங்களை சுட்டிக்காட்டி அவுஸ்திரேலிய வீரர்கள் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதனை ஆட்சேபித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அடுத்த மாதம் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள  அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கே மூவகைப் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுவதற்கு திட்டமிடப்பட்டிருக்கின்றது.

IPL இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தகுதிபெற்ற குஜராத்!

இவ்வாறான நிலையில் இலங்கையில் தற்போது நிலவுகின்ற பொருளதார மற்றும் அரசியல் நெருக்கடிகள், அவுஸ்திரேலிய வீரர்கள் இலங்கை வருவதற்கு நெறிமுறை ஆட்சேபனை தெரிவிக்க காரணமாக அமைகின்றது. எனினும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப்பயணமானது இந்த சுற்றுப் பயணத்திற்கு பொறுப்பாக இருக்கும் உயர் அதிகாரிகள் மேற்கொள்கின்ற தீர்மானத்திற்கு அமைவாக நடைபெறும் எனக் கூறப்படுகின்றது.

இந்த மாத ஆரம்பத்தில் இலங்கையில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதோடு நாடு பூராகவும் பல வன்முறைச் சம்பவங்களும் பதிவாகின. அத்துடன் இலங்கையில் பணவீக்கம், மற்றும் அடிப்படை வசதிகளின் குறைபாடு என்பனவும் காணப்படுகின்றது.

மறுமுனையில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை கடந்த வாரம் இலங்கையின் நிலைமைகள் குறித்து தமது அதிகாரிகளை வைத்து ஆய்வு செய்திருந்ததோடு, இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான தொடரினை நடாத்துவதற்கான பாதுகாப்பு காணப்படுவதனையும் உறுதி செய்திருந்தது.

பந்துவீச்சில் தொடர்ச்சியாக எதிரணிக்கு அழுத்தத்தைக் கொடுக்க தவறினோம் – சில்வர்வூட்

ஆனால் அவுஸ்திரேலிய அணியின் வீரர்கள் சிலர் இலங்கை அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது தொடர்பில் விழுமியம் (Moral) சார்ந்த விடயங்களையும் கருத்திற் கொள்கின்றனர்.

அதன்படி பொது மக்களுக்கு நாட்டில் மின்சாரத் தட்டுப்பாடு நிலவும் இரவு வேளைகளில் இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான T20I தொடர் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது. (இந்தப் போட்டிகள் பகல்வேளைக்கு மாற்றப்படும் எனக் கூறப்படுகின்றது.) அதேவேளை பொது மக்களுக்கு எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகின்ற தற்போதைய சந்தர்ப்பத்தில் கண்டி, காலி என நாட்டின் வெவ்வேறு இடங்களில் கிரிக்கெட் போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன. இவ்வாறான விடயங்கள் விழுமியம் தொடர்பிலான கேள்விகளை அவுஸ்திரேலிய வீரர்கள் இடையே  தோற்றுவிக்கின்றது.

வீரர்களுக்கு எழுந்திருக்கும் ஆட்சேபனைகளை அவதானத்தில் எடுத்திருப்பதாக கூறும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரி (CEO) டொட் கிரீன்பேக், வீரர்கள் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வதனை முழுமையாக மறுக்கவில்லை எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.

“(அவுஸ்திரேலிய) வீரர்கள் இலங்கையின் நிலைமை தொடர்பில் அவதானத்துடன் இருக்கின்றனர். உணவு விலை அதிகரிப்பு, மின்சாரத் துண்டிப்பு மற்றும் எரிபொருள் பிரச்சினை போன்றவை மூலம் இலங்கை மக்கள் படும் கஷ்டங்களை கருத்திற் கொள்ளும் போது (அவுஸ்திரேலிய) வீரர்களுக்கு அங்கே சுற்றுப் பயணம் மேற்கொள்வதில் கஷ்டம் இருப்பதாக கூறும் விடயத்தினை ஏற்றுக் கொள்ள முடியுமாகவே இருக்கின்றது.” என்றார்.

மறுமுனையில் பணவீக்கம் அதிகரித்துள்ள இலங்கையின் பொருளதாரத்திற்கு, இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான தொடர் நடைபெறுவது அனுகூலமாக விடயமாக அமையும் எனவும் பார்க்கப்படுகின்றது.

கடைசியாக 2016ஆம் ஆண்டு இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட அவுஸ்திரேலிய அணி, இலங்கையில் மூவகைப் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முதல் T20I போட்டியில் இலங்கை மகளிர் அணிக்கு தோல்வி

விடயங்கள் இவ்வாறு இருக்க கொவிட்-19 வைரஸ் பரவிய காலப்பகுதியில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வீரர்கள் பொது மக்களுக்கு உதவும் நிலையில் கடந்த ஆண்டு இந்திய பிரீமியர் லீக் தொடரின் போது ஐக்கிய நாடுகள் (UN) அமைப்பிற்காக நிதி சேகரிப்பு பணிகளை மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எனவே இலங்கையில் தற்போது நிலவும் சிக்கல் நிலை கொவிட்-19 வைரஸ் போன்ற மனித பேரவல நிலை (Humanitarian Crisis) இல்லை என்ற போதும், அவுஸ்திரேலிய வீரர்கள் இலங்கையின் தற்போதைய நிலைமைக்கு தங்களால் முடிந்த உதவியை வழங்குவதனை எதிர்பார்க்க முடியும்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<