கொவிட்-19 காரணமாக பின்னடைவை சந்திக்குமா மகளிர் கிரிக்கெட்?

74
Knight concerned

கொவிட்-19 வைரஸ் காரணமாக மகளிருக்கான விளையாட்டுகள் அனைத்தும் சர்வதேச ரீதியில் பின்னடைவை சந்திக்கும் நிலை ஏற்படும் அபாயம் உள்ளதாக இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின்  தலைவி ஹேதர் நைட் கவலை தெரிவித்துள்ளார். 

Catch me if you can: முத்தையா முரளிதரன்

கிரிகெட்டின் உயரிய அங்கீகாரமான ஐசிசி Hall of Fame இனுள் உள்வாங்கப்பட்ட முதல்…

கொவிட்-19 வைரஸ் காரணமாக சர்வதேச ரீதியில் நடைபெறவுள்ள விளையாட்டுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. இவ்வாறான நிலையில், பொருளாதாரத்தை கருத்திற்கொண்டு, ஆடவருக்கான போட்டிகளை மாத்திரம் மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை உயர் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். பொதுவாக மகளிருக்கான போட்டிகளில் குறைந்த வருமானம் பெறப்படுவதால், மகளிருக்கான போட்டிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.   

அதற்கு பதிலளித்துள்ள ஹேதர் நைட், “கிரிக்கெட்டில் மாத்திரமின்றி, சர்வதேச ரீதியில் நடைபெறும் மகளிருக்கான விளையாட்டுகளுக்கு எவ்வாறான, முன்னுரிமை வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.  பொருளாதார ரீதியில் பயனை தரும் போட்டிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஆனால், தற்போது மகளிருக்கான போட்டிகளிலும் நல்ல முன்னேற்றம் காணப்படுகின்றது. எனவே, ஆடவருக்கான போட்டிகளை போன்று, மகளிருக்கான போட்டிகளும் தொடங்குவதற்கு சமமான வாய்ப்பை பெற்றுக்கொடுக்க வேண்டும்” என்றார். 

மகளிருக்கான கிரிக்கெட் போட்டிகள் தற்போது சர்வதேச ரீதியில் அதிகமான முன்னேற்றத்தை கண்டுள்ளது. இறுதியாக மெல்போர்னில் நடைபெற்ற மகளிருக்கான T20I உலகக் கிண்ண  இறுதிப் போட்டியை பார்வையிட 86 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் வருகைத்தந்திருந்தனர். இந்தப் போட்டியானது கொவிட்-19 வைரஸ் காரணமாக போட்டிகள் நிறுத்தப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றிருந்தது.  

“இவ்வாறான ரசிகர் பட்டாளம் ஒன்றினை டெஸ்ட் போட்டிகளில் மாத்திரமே நான் பார்த்திருக்கிறேன். ஆனால், மகளிர் போட்டி ஒன்றுக்கு இவ்வாறான ரசிகர் கூட்டம் வந்திருந்தமை மிகவும் சிறப்பான நிகழ்வாகும். 

இந்த ஒரு போட்டிக்கு மாத்திரம் அல்ல. இதுபோன்ற மகளிருக்கான கிரிக்கெட் போட்டிகளுக்கு இதனைவிட அதிகமான ரசிகர்கள் இணைந்துக்கொள்வார்கள் என்பதுடன், அவர்கள் மகளிருக்கான கிரிக்கெட்டை ரசிப்பார்கள் என நம்புகிறேன்” என ஹேதர் நைட் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.  

இங்கிலாந்தில் நடைபெறவிருந்த உள்ளூர் போட்டிகள் அனைத்தும் ஜூலை முதலாம் திகதிவரை பிற்போடப்பட்டுள்ளன. இந்தநிலையில், இங்கிலாந்து மகளிர் மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையிலான தொடர் ஜூன் மாதம் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. எனவே, இந்த தொடர் நடைபெறுவதிலும் தற்போது சிக்கல் நிலை தோன்றியுள்ளது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<