3ஆவது ஒருநாள் போட்டியை தவறவிடும் டில்ஷான் மதுஷங்க?

Sri Lanka Tour of Bangladesh 2024

79

பங்களாதேஷ் அணியுடன் நடைபெறவுள்ள மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுஷங்க விளையாடுவது சந்தேகம் என தெரிவிக்கப்படுகிறது. 

நேற்று முன்தினம் (15) பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது டில்ஷான் காயம் காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறினார், இதன் காரணமாக அடுத்த சில வாரங்களுக்கு அவருக்கு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதனால், இம்மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐபிஎல் போட்டியின் முதல் பாதியில் அவருக்கு விளையாட முடியாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது 

எவ்வாறாயினும், டில்ஷான் மதுசங்கவிற்கு ஏற்பட்டுள்ள காயம் தொடர்பிலும், பங்களாதேஷ் அணியுடன் நடைபெறவுள்ள 3ஆவது ஒருநாள் போட்டியில் அவர் விளையாடுவாரா என்பது தொடர்பிலும் இலங்கை கிரிக்கெட் சபை எந்தவொரு அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.   

முன்னதாக பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் தொடருக்காக பெயரிடப்பட்ட இலங்கை குழாத்தில் இடம்பெற்றிருந்த மற்றுமொரு வேகப்பந்து வீச்சாளரான அசித்த பெர்னாண்டோ, காயம் காரணமாக குறித்த தொடரிலிருந்து விலகினார் 

எனவே தற்போது ஒருநாள் தொடரை வெற்றி கொள்கின்ற அணி எது என்பதை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டியிலிருந்து டில்ஷான் மதுசங்கவும் விலகினால் அது இலங்கை அணிக்கு மிகப் பெரிய பின்னடைவைக் கொடுக்கும்.     

சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி நாளை (18) நடைபெற உள்ளது. 

>> மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க