திஹண்ட்ரடிலிருந்து விலகும் டேவிட் வோர்னர்

72
Warner

இங்கிலாந்தில் முதன்முறையாக நடைபெறவுள்ள ”தி ஹண்ட்ரட் (The Hundred)” கிரிக்கெட் தொடரிலிருந்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் விலகியுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக டேவிட் வோர்னர் குறித்த தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரிலிருந்து விலகியுள்ளார் என அவரின் முகாமையாளார் கருத்து வெளியிட்டுள்ளதாக கிரிக்கெட் இணையதளமான ESPNCricinfo செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றலிருந்து தப்பிய பாகிஸ்தான் வீரர்கள்

பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் (PSL) பங்கேற்ற வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட 128 பேருக்கு எடுக்கப்பட்ட…

இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் மூலமாக அணிக்கு தலா 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் தொடர், இந்த பருவகாலத்தில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொடர், எதிர்வரும் ஜூலை 17ம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் 15ம் திகதிவரை இந்த தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், சௌத்எம்ப்டனை மையமாகக் கொண்டு விளையாடவுள்ள சௌதெர்ன் ப்ரேவ் அணிக்காக ஒரு இலட்சத்து 25 ஆயிரம் பவுண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட டேவிட் வோர்னர் குறித்த அணியிலிருந்து விலகியுள்ளார்.

இவர் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியிருந்தாலும், குறித்த தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடர் நடைபெறும் காலப்பகுதியில் அவுஸ்திரேலிய அணி, ஜிம்பாப்வே அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் ஆரம்பத்தில் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த போதும், அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை குறித்த தொடரை ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் நடத்தவுள்ளதாக அறிவித்தது.

அதேநேரம், சௌதெர்ன் ப்ரேவ் அணியிலிருந்து டேவிட் வோர்னர் விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரர் மார்கஸ் ஸ்டொய்னிஸ் இணைக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆரோன் பின்ச், க்ளேன் மெக்ஸ்வேல், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மிச்சல் ஸ்டார்க் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதுடன், என்ரூ மெக்டோனல்ட் பேர்மிங்கம் பீனிக்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையர்களுக்கு, இலங்கை கிரிக்கெட் வீரர்களின் அறிவுரை

முழு இலங்கையினையும் கொரோனா வைரஸ் பீதி ஆட்கொண்டிருக்கும் நிலையில், இலங்கை அரசாங்கமும், இலங்கையின்…

எவ்வாறாயினும், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இங்கிலாந்தில் நடைபெறும் தொழில்முறை போட்டிகள் அனைத்தும் மே மாதம் 28ம் திகதிவரை நடைபெறாது என இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இதனால், தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரும் குறித்த திகதியில் நடத்தப்படுமா? இல்லையா? என்ற சந்தேகமும் எழுந்து வருகின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<