என்னை நினைத்து லாரா பதட்டமாக இருந்தார் – கெய்ல்

767
Gayle & Lara

தென் ஆபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 317 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் களத்தில் துடுப்பெடுத்தாடிக் கொண்டு  இருக்கும் போது தனது சாதனையை முறியடித்துவிடுவாரோ? என்று ப்ரைன் லாரா பதட்டமாக இருந்ததாக க்றிஸ் கெய்ல் நினைவு கூர்ந்துள்ளார்.

டி20 கிரிக்கட்டின் சிக்ஸர் மன்னன் என்று அழைக்கப்படுபவர் க்றிஸ் கெய்ல், தனது கிரிக்கட் வாழ்க்கை குறித்து “சிக்ஸ் மெஷின்” என்ற சுயசரிதைப் புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.

இதில் கிரிக்கட் போட்டியின்போது தனக்குக் கிடைத்த அனுபவத்தைக் கூறியுள்ளார். அப்போது ஒரு இடத்தில் லாரா தனது 400 ஓட்டங்கள் என்ற  சாதனையை நான் முறியடித்துவிடுவேனோ என்று பதட்டமாக இருந்தார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து கெய்ல் தனது புத்தகத்தில் ‘‘சில வீரர்கள் தங்களது சாதனை பற்றி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். தென் ஆபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் லாரா நான்கு ஓட்டங்களோடு ஆட்டம் இழந்து வெளியான பின்பு, வீரர்கள் அறையில் சென்று புத்ததம் வாசித்துக்கொண்டிருந்தார்.

அவ்வப்போது லாரா பெல்கனிக்கு அடிக்கடி வந்து ஓட்ட விபரத்தை பார்த்துக்கொள்வார். பின்னர் அறைக்கு திரும்பிவிடுவார். லாரா உள்ளே வெளியே அடிக்கடி சென்றதை பார்த்து ஆச்சரியப்பட்ட சர்வான், இதை கவனித்துள்ளார். மேலும், என்னுடைய ஓட்டங்கள்  300 ஓட்டங்களைத் தாண்டும்போது அவர் வெளியில் வந்து என்னுடைய ஓட்டங்களை அடிக்கடி பார்த்துள்ளார். அப்போது அவர் மிக மிகக் கவலையாக இருந்துள்ளார்.

நான் மதிய உணவு இடைவேளை மற்றும் தேனீர் இடைவேளைக்கு வரும்போது அவர் என்னிடம் ஏதும் பேசவில்லை. எந்தவித யோசனைகளையும் கூறவில்லை. நான் மீண்டும் களம் இறங்கும்போது அவர் மெதுவாக சென்று புத்தகம் படித்து விட்டு, மீண்டும் வெளியே வந்து கவலையோடு என்னுடைய ஓட்டங்களைப் பார்த்தார்” என்றார் என்று கூறியுள்ளார்.