ஏறாவூர் நகரசபை அணியை வீழ்த்தி சம்பியனான மண்முனை வடக்கு அணி

442
Batticaloa District Sports Festival

மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் மண்முனை வடக்கு பிரதேச செயலக அணி, ஏறாவூர் நகரசபை அணியை 2-0 என்ற கோல்கள் கணக்கில் தோற்கடித்து சம்பியன் பட்டம் வென்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டுத் திருவிழாவின் ஒரு அங்கமாக நடைபெற்ற இந்த கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி வெள்ளிக்கிழமை (28) மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் ஆரம்பமாகியது.

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலான இப்போட்டியில் இரு பிரதேச செயலகங்களை சேர்ந்த அணிகளின் வீரர்களும் ஆரம்பத்தில் இருந்தே உற்சாகத்துடன் விளையாடினர்.

>> பிஃபா உலகக் கிண்ண அடுத்த தகுதிகாண் சுற்றுக்கு இலங்கை முன்னேற்றம்

இந்நிலையில் பந்தின் ஆதிக்கத்தை தொடர்ந்தும் வைத்திருந்த மண்முனை வடக்கு அணியின் டரோலிஸ் பர்தலோட் போட்டியின் முதல் கோலினை 17ஆவது நிமிடத்தில் போட்டார்.

பின்னர் தொடர்ந்து முன்னேறிய ஆட்டத்தில் Y. உஷாந்தன் மூலம் போட்டியின் இரண்டாவது கோல் மண்முனை வடக்கு அணிக்காக 23ஆவது நிமிடத்தில் பெறப்பட்டது.

இதேநேரம் ஏறாவூர் நகரசபை அணி, தொடர்ந்தும் கோல் பெற முயற்சி செய்த போதிலும் அவர்களால் கோல்கள் எதனையும் பெற முடியவில்லை.

இதனால், போட்டியின் முதல் பாதி மண்முனை வடக்கு அணியின் முன்னிலையோடு நிறைவுக்கு வந்தது.

முதல் பாதி: மண்முனை வடக்கு 2 – 0 ஏறாவூர் நகரசபை

போட்டியின் இரண்டாம் பாதி மிக மெதுவாகவே ஆரம்பித்தது. இந்தப் பாதியில் இரண்டு அணிகளும் கோல்கள் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட போதிலும் அவை எதுவும் வெற்றியளிக்கவில்லை.

தொடர்ந்து இரண்டாம் பாதியில் கோல்கள் எதுவும் இல்லாத நிலையில் முதல் பாதியில் பெற்றுக் கொண்ட இரண்டு கோல்களுடன் மண்முனை வடக்கு அணி போட்டியின் வெற்றியாளர்களாக மாறியது.

முழு நேரம்: மண்முனை வடக்கு 2 – 0 ஏறாவூர் நகரசபை

கோல் பெற்றவர்கள்

மண்முனை வடக்கு – டரோலிஸ் பர்த்தலோட் 17’, Y. உஷாந்தன் 23’

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<