T20 உலகக் கிண்ணத் தொடரில் இருந்து நீக்கப்பட்ட பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் வீரர்கள் பங்கெடுக்கும் ஒடோம்மோ பங்களாதேஷ் T20 கிண்ணம் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
>>T20 உலகக் கிண்ணத்துக்கான டிக்கெட் விற்பனை நிலையங்கள் திறப்பு<<
அதன்படி நேற்று (05) தொடக்கம் ஆரம்பித்துள்ள இந்த T20 தொடர் இந்தியாவில் நடைபெறும் T20 உலகக் கிண்ணத் தொடரில் விளையாட அந்நாட்டு வீரர்களுக்கு பங்களாதேஷ் அரசு தடை விதித்ததை அடுத்து, அந்தத் தொடரில் பங்கேற்க முடியாத முன்னணி வீரர்கள் அனைவரும் மூன்று அணிகள் கொண்ட இந்த உள்நாட்டுத் தொடரில் விளையாடுகின்றனர்.
இந்தத் தொடரில் பங்கெடுக்கும் அணிகளில் ஒன்றான Dhumketu XI அணியினை லிடன் தாஸ் தலைமை தாங்க, நஜ்முல் ஹொசைன் தலைமையில் Durbar XI அணியும், அக்பர் அலி தலைமையில் Duranto XI அணியும் களம் காண்கின்றன.
இந்த தொடரின் அனைத்துப் போட்டிகளும் டாக்காவின் மிர்பூர் மைதானத்தில் நடைபெறுகின்றன. தொடரின் லீக் போட்டிகள் பெப்ரவரி 5, 6 மற்றும் 7 ஆகிய திகதிகளில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதோடு, பின்னர் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் பெப்ரவரி 9 இறுதிப்போட்டியில் மோதும்.
பங்களாதேஷின் உள்ளூர் போட்டிகள் வரலாற்றில் முதன் முறையாக இந்தத் தொடரில் Impact Player விதி பயன்படுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதேநேரம் இந்தத் தொடரின் மொத்த பரிசுத்தொகையாக இலங்கை நாணயப்படி சுமார் 63 மில்லியன் ரூபாய்கள் வரை வழங்கப்படவிருக்கின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















