இங்கிலாந்து தொடரில் ஆமிர் திறமையாக செயற்படுவார் – அசார் அலி

650
Azhar Ali backs Mohammad Amir

இங்கிலாந்து மண்ணில் தற்போது இலங்கை அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டியைக் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இந்தத் தொடர் ஜூலை முதல் வாரம் நிறைவுபெறுகிறது. அந்தத் தொடர்  முடிவுற்றபின் பாகிஸ்தான் கிரிக்கட் அணி எதிர்வரும் ஜூலை மாதம் 3ஆம் திகதி தொடக்கம் செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி வரை இங்கிலாந்து அணியோடு 4 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகள்  மற்றும் ஒரு டி20 போட்டியைக் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இந்த நிலையில் இங்கிலாந்து தொடரில் 5வருடத் தண்டனையை முடித்த பிறகு பாகிஸ்தான் அணியில் இணைந்த முகமத் ஆமிருக்கு கடினமாக  இருக்கும். ஆனாலும் இதை அவர் திறமையாக கையாள்வார் என்று பாகிஸ்தான் ஒருநாள் அணியின் தலைவர் அசார் அலி கூறியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கட்டில் இருந்து குலசேகர ஓய்வு பெறக் காரணம்?

6 வருடங்களுக்கு முன் 2010ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் விளையாடும் போது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் சல்மான் பட், வேகப்பந்து வீச்சாளர் முஹமத் ஆசிப் மற்றும் முஹமத் ஆமிர் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதில்  முஹமத்  ஆமிர் சிறைத்தண்டனை அனுபவித்ததோடு, ஐந்தாண்டு தடையும் பெற்றார். தண்டனைக் காலம் முடிந்தபின் முஹமத் ஆமிர் சர்வதேச கிரிக்கட் அரங்கிற்கு திரும்பினார்.

முஹமத் ஆமிர் பாகிஸ்தான் அணிக்குத் திரும்பிய பின்னர் நியுசிலாந்தில் நடைபெற்ற கிரிக்கட் தொடர், டுபாயில் இடம்பெற்ற பாகிஸ்தான் சுப்பர் லீக், பங்களாதேஷில் நடைபெற்ற டி20 ஆசியக் கிண்ணத் தொடர் மற்றும் இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ணம் ஆகியவற்றில் கலந்து கொண்டுள்ளார்.

இதற்கிடையே பாகிஸ்தான் அணியில் ஆமிர் இடம்பிடித்ததும், அந்த அணியின் ஒருநாள் அணித் தலைவர்  அசார் அலி தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், தற்போது இங்கிலாந்து தொடரில் ஆமிர் இடம்பிடித்தால், அவருக்கு அணி முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.

தென் ஆபிரிக்க கிரிக்கட் வரலாற்றில் இன்று துயரமான நாள்

இதுகுறித்து அசார் அலி கூறுகையில் ‘‘2010-இல் என்ன நடந்து என்பது கடந்த கால விஷயங்கள். ஆனால், தற்போது நாம் முன்னோக்கி செல்வது தேவையானது. தற்போது அவர் எங்களுடன் உள்ளார். அவர் எங்களுடன் நேரடியாக இந்த தொடருக்கு வந்திருந்தால் அது கடினமாக இருந்திருக்கும். ஆனால், எங்களுடன் நீண்ட நாட்கள் விளையாடி, நன்றாக ஒன்றிணைந்த பின் இந்த தொடர் வருகிறது.

தற்போது ஆமிர் நெருக்கடியில் இருக்கமாட்டார். ஏனென்றால், அவர் நீண்ட காலத்திற்கு முன்பே அணிக்கு திரும்பி, நெருக்கடியைக் கடந்து விட்டார். இங்கிலாந்து அவருக்கு சம்பவம் (மேட்ச் பிக்சிங் புகார்) நடந்த இடம் என்பது எனக்குத் தெரியும், இருந்தாலும் அணிக்குத் திரும்பியது போல் இந்த நெருக்கடியையும் சிறப்பாக கையாள்வார் என்ற நம்பிக்கை உள்ளது. இருந்தாலும், ஏதாவது சம்பவம் நடந்தால் நாங்கள் கூட்டாக அதை சமாளிப்போம்” என்றார்.

24 வயதான இடதுகை வேகப்பந்து வீச்சாளரான முஹமத் ஆமிர் 2009ஆம் ஆண்டு இலங்கை  அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது பாகிஸ்தான் அணியில் அறிமுகமானார். தற்போது வரை 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பந்தை மிக அற்புதமாக ஸ்விங் செய்யும் முஹமத் ஆமிர் மிக அபாரமாக பந்துவீசி 29.09 என்ற பந்துவீச்சு சராசரியில் 51 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார்.  அதில் 3 தடவை இனிங்ஸ் ஒன்றில் 5 விக்கட்டுகளைக் கைப்பற்றியுள்ளதோடு 2 தடவை இனிங்ஸ் ஒன்றில் 4 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

முரளியின் அறிவுரைசன்றைசர்ஸ் அணியின் வெற்றியின் ரகசியம்

அவர் 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடைசியாக விளையாடிய டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் முதல் இனிங்ஸில் 6 விக்கட்டுகளைக் கைப்பற்றி இருந்தார். அந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி இனிங்ஸ் தோல்வி அடைந்ததால் அவரால் 2ஆவது இனிங்ஸில் பந்து வீச முடியாமல் போனது. அத்தோடு அவர் இறுதியாக விளையாடிய இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் போட்டித் தொடரின் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டு இருந்தார்.

பஞ்சாபை பிறப்பிடமாகக் கொண்ட முஹமத் ஆமிர் பாகிஸ்தான் அணிக்காக 17 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 30 விக்கட்டுகளையும் 29 டி20 போட்டிகளில் 34 விக்கட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஆமிர் துடுப்பாட்டத்தில் பெரிதளவு பிரகாசிக்காவிட்டாலும் நியுசிலாந்து அணியுடனான ஒருநாள் போட்டி ஒன்றின் போது ஆட்டம் இழக்காமல் 73 ஒட்டங்களைப் பெற்று இருந்தமை அவர் ஓரளவு துடுப்பெடுத்தாடக் கூடியவர் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்