இலங்கை மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய அவுஸ்திரேலிய வீரர்கள்!

Australia tour of Sri Lanka 2022

247

சுற்றுலா இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற தொடரின் பரிசுத்தொகையை இலங்கையில் உள்ள சிறுவர்கள் மற்றும் குடும்பங்களுக்கு வழங்குவதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 T20I போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில், T20I தொடரை அவுஸ்திரேலியா வெற்றிக்கொண்டதுடன், ஒருநாள் தொடரை இலங்கை அணியும், டெஸ்ட் தொடர் 1-1 எனவும் சமனிலையாகியிருந்தன.

>> CSA T20 தொடரின் Marquee பட்டியில் இடம்பிடித்த இலங்கையின் 10 வீரர்கள்!

குறித்த இந்த தொடரின் போதும், தற்போதும் இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றது. இந்தநிலையில், பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள குடும்பங்கள் மற்றும் சிறுவர்களுக்காக தங்களுக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகையை நிதியுதவியாக வழங்க அவுஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள் தீர்மானித்துள்ளனர்.

அதன்படி இந்த தொகையானது அவுஸ்திரேலியாவின் யுனிசெப் (Unicef) நிறுவனத்தின் ஊடாக இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அவுஸ்திரேலியா கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுற்றுப்பயணம் இலங்கை கிரிக்கெட்டுக்கும், இலங்கை மக்களுக்கும் பொருளாதார ரீதியில் பாரிய உந்துதலை கொடுத்திருந்ததுடன், அவுஸ்திரேலிய அணிக்கு இலங்கை ரசிகர்கள் தங்களுடைய நன்றிகளை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<