மெஸ்ஸி அணியில் இணையவேண்டுமென ரசிகர்கள் வீதியிலிறங்கிப் போராட்டம்

255

‘கோல் மன்னன்’ என்றழைக்கப்படும் லியோனல் மெஸ்ஸி தேசிய கால்பந்து அணிக்கு திரும்ப வேண்டும் என ஆர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த அவரது ரசிகர்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

உலகத்தின் முதலாவது சிறந்த கால்பந்தாட்ட வீரராக ஐந்து தடவைகள் தேர்வு செய்யப்பட்டவர் லியோனல் மெஸ்ஸி(29).

ஆர்ஜென்டீனா அணியின் முன்னணி வீரர், எப்.சி. பார்சிலோனா அணியின் புகழ்பெற்ற ஆட்டக்காரர். நாடுகளுக்கிடையேயான ஆட்டத்தில் 112 தடவைகள் விளையாடி 55 கோல்களைப் போட்டவர், ஆர்ஜென்டினாவில் அதிக கோல்களைப் போட்ட ஒரேவீரர்.

ஒலிம்பிக் போட்டியில் 2008ஆம் ஆண்டு ஆர்ஜென்டினாவுக்குத் தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்தவர்..

எப்.சி. பார்சிலோனாவில் விளையாடி நான்குமுறை வெற்றியைத் தேடிக் கொடுத்தவர், கடந்த பத்து வருடங்களாக கால்பந்தாட்ட உலகில் முதன்மை இடத்தில் இருந்தவர், ஸ்பானிஷ் கோப்பையை எட்டுமுறை வென்று காட்டியவர்.

2014ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சிறந்த வீரராகத் தேர்வானவர் என உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி, கடந்த மாதம் தனது ஓய்வை அறிவித்தார்.

உலகம் முழுவதும் கோடிக் கணக்கான ரசிகர்களின் நெஞ்சில் இடம் பெற்றுள்ள மெஸ்ஸி, கோபா அமெரிக்க கோப்பை இறுதிப்போட்டியில் சிலியிடம் தோற்றதைத் தொடர்ந்து சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாகக் கனத்த இதயத்துடன் அறிவித்தார்.

இதனால், அவர் ஆர்ஜென்டினா அணிக்காக இனி விளையாடமாட்டார். பார்சிலோனா கிளப் அணியில் மட்டுமே விளையாடுவார் எனத் தெரியவந்துள்ளது. அவரது விலகல் முடிவு உலகநாடுகளில் உள்ள பலகோடி கால்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ள அதேவேளையில் அவர் பிறந்தநாடான ஆர்ஜென்டினா மக்களுக்கு பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது.

தேசிய கால்பந்தாட்ட அணியில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்த முடிவை மெஸ்ஸி திரும்பப்பெற வேண்டும் என ஆர்ஜென்டினா நாட்டின் அதிபர் மவுரிசியோ மக்ரி, அந்நாட்டின் மற்றொரு பிரபல கால்பந்தாட்ட வீரர் மரடோனா ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஆர்ஜென்டினா நாட்டின் தலைநகரான பியுனோஸ் ஐரெஸ் நகரில் உள்ள விளையாட்டு வீரர்களின் வெற்றியைக் கொண்டாடும் இடமானஓபெலெஸ்க்கோசதுக்கத்தின் அருகே நேற்றுமாலை ஆயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் திரண்டனர்.

ஓய்வு முடிவை மெஸ்ஸி திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதவிதமான பதாகைகளை கைகளில் ஏந்தியபடி அங்கு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ஜென்டினா கால்பந்து அணியின் சீருடையான நீலம், வெள்ளை பட்டைகளுடன் கூடிய உடையை அணிந்து மெஸ்ஸி மீண்டும் நாட்டுக்காக விளையாட வேண்டும் என அவர்கள் கோஷமிட்டனர்.

போராட்டக்காரர்களில் ஒருவரான சாண்டியாகோ பார்டெரோ என்ற வாலிபர், ‘மெஸ்ஸியைப் போன்ற நட்சத்திர வீரர்கள் 500 மில்லியன் ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் தோன்றுவார்கள். அவர் வாழும் சமகாலத்தில் நாங்களும் வாழ்வதைப் பெருமையாகக் கருதுகிறோம்என தெரிவித்தார்.

மற்றொரு ரசிகரான ஜுவன் ஆல்பர்டோ சலஸ், ‘மெஸ்ஸி தனித்துவமானவர், கடவுளைப் போன்றவர். உணர்ச்சிவசப்பட்டு வெளியிட்ட ஓய்வு அறிவிப்பை மாற்றிக்கொண்டு மீண்டும் அவர் தாய்நாட்டு கால்பந்து அணிக்காக விளையாட வேண்டும்என வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்