ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் பயிற்சியாளருக்கு ஐந்து வருடத்தடை

114

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை (ACB), தமது நாட்டினைச் சேர்ந்த கிரிக்கெட் பயிற்சியாளரான நூர் மொஹமட் லலாய்க்கு சூதாட்ட குற்றச்சாட்டு ஒன்றின் அடிப்படையில் ஐந்து வருட போட்டித்தடையினை வழங்கியுள்ளது. 

பந்தின் மீது சனிடைசர் தடவிய ஆஸி. வீரர் இடைநீக்கம்

ஆப்கானிஸ்தானில் தற்போது ஸ்பாகிஸா கிரிக்கெட் லீக் (எஸ்.சி.எல்) என்னும் உள்ளூர் T20 தொடர் நடைபெற்றுவருகின்றது. இந்த T20 தொடரின் கடந்த பருவகாலத்தின் போது ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாடி வருகின்ற வீரர் ஒருவரினை ஆட்டநிர்ணயத்தில் ஈடுபடுத்துவதற்கு முயற்சித்த குற்றச்சாட்டின் பெயரிலேயே, நூர் மொஹமட் லலாய் போட்டித்தடையினைப் பெற்றிருக்கின்றார். 

”கனிஷ்ட பயிற்சியாளர் ஒருவர் உள்ளூர் ரீதியில் உயர்தரமாக கருதப்படும் 2019ஆம் ஆண்டுக்கான எஸ்.சி.எல். கிரிக்கெட் தொடரில் இவ்வாறு செய்தது ஏமாற்றம் தருவதாக இருப்பதோடு, மிகவும் கடுமையான குற்றமாகவும் கருதப்படுகின்றது.” 

”குறித்த பயிற்சியாளர், 2019ஆம் ஆண்டுக்கான எஸ்.சி.எல். தொடரின் சில போட்டிகளில் ஒரு முகவராக தேசிய அணியின் வீரர் ஒருவரினை சூதாட்டத்தில் ஈடுபடுத்த முயற்சித்திருக்கின்றார். எனினும், இது தொடர்பிலான முறைப்பாடு (அப்போதே) கிடைக்கப் பெற்றதால் குறித்த முயற்சிகள் தடுக்கப்பட்டிருக்கின்றன.” என நூர் மொஹமட் லலாய்க்கு போட்டித்தடை விதிக்கப்பட்ட விடயம் தொடர்பில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்பு பிரிவின் சிரேஷ்ட அதிகாரி சயேத் அன்வர் சாஹ் குரைஷி குறிப்பிட்டுள்ளார். 

அதோடு மேலும் பேசிய சயேத் அன்வர் சாஹ் குரைஷி, நூர் மொஹமட் லலாயின் சூதாட்டக் குற்றத்தினை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரரினை பாராட்டி, அவரின் தைரியத்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். 

டெல்லி கெப்பிடல்ஸ் அணியில் ஒருவருக்கு கொரோனா தொற்று

இதேநேரம், நூர் மொஹமட் லலாய் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டுள்ளதுடன், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையினையும் ஏகமனதாக ஒப்புக்கொண்டிருக்கின்றார். 

நூர் மொஹமட் லலாய், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் உதவிப் பயிற்சியாளராக செயற்படுவதோடு, ஹாம்பலானா கிரிக்கெட் அகடமியின் முழுநேரப் பயிற்சியாளராக கடமையாற்றிவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<