காலியில் நடைபெற்று முடிந்திருக்கும் சுற்றுலா இலங்கை – இந்தியா ஆகிய அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 165 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது. அத்துடன் இந்த வெற்றியுடன் இந்தியா இரு போட்டிகள் கொண்ட தொடரிலும் 1-0 என முன்னிலை அடைந்துள்ளது.
இந்த டெஸ்ட் போட்டியின் நேற்றைய (18) நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 84 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் காணப்பட்டிருந்தது. களத்தில் ஆட்டமிழக்காதிருந்த இலங்கை அணியின் தலைவர் தனன்ஞய டி சில்வா 31 ஓட்டங்களுடனும், சொனல் தினுஷ 25 ஓட்டங்களுடனும் இருந்தனர்.
போட்டியின் வெற்றி இலக்கான 372 ஓட்டங்களை நோக்கி தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்த இலங்கை அணிக்கு வெற்றிக்கு 288 ஓட்டங்கள் தேவையாகக் காணப்பட்டது. இலங்கை அணிக்கு ஐந்தாம் நாளில் முதல் மணித்தியாலயம் சிறப்பாக அமைந்தது.
முதல் மணித்தியாலத்தில் இலங்கை அணியின் ஆறாம் விக்கெட்டுக்காக தனனஞ்சய டி சில்வா, சொனால் தினுஷ ஜோடி 95 வரை சேர்த்திருக்க தனன்ஞய டி சில்வா ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழக்கும் போது 7 பௌண்டரிகள் அடங்கலாக 59 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.
தனன்ஞய டி சில்வாவின் விக்கெட்டின் பின்னர் இலங்கை அணியானது தங்களது எஞ்சிய விக்கெட்டுக்களை குறுகிய இடைவெளிகளில் இழந்து 77.4 ஓவர்களில் 206 ஓட்டங்கள் மட்டும் பெற்றது.
இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் கடந்த இன்னிங்ஸில் சதம் விளாசிய சொனால் தினுஷ 8 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 84 ஓட்டங்கள் பெற்றார்.
இந்திய அணியின் பந்துவீச்சில் மானவ் சுதர் 55 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களையும், பிரசித் கிரிஷ்ணா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர். போட்டியின் ஆட்டநாயகனாக தேவ்தட் படிக்கல் தெரிவாகினார்.