லங்கா பிறீமியர் லீக் ஆறாவது அத்தியாயம் ஆரம்பமாவதற்கு முன்னதாக, தம்புள்ள சிக்சர்ஸ் ((Dambulla Sixers) அணியானது ப்ரியங்க டி சில்வா தலைமையிலான ‘டி சில்வா ஹோல்டிங்ஸ்’ (DeSilva Holdings) இன் கீழ் தொடர்ந்து செயல்படும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் முன்னணி சிவில் பொறியியல் ஆலோசனை நிறுவனமான ‘செகுயா கன்சல்டன்ட்ஸ்’ (Sequoia Consultants, Inc.) இந்த அணிக்கு ஒத்துழைப்பு வழங்குகிறது. இந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும், தலைவராகவும் டி சில்வா பொறுப்பு வகிக்கிறார். அமெரிக்கா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் பல வணிகங்களைக் கொண்டுள்ள ஒரு பட்டய சிவில் பொறியியலாளரும் தொழிலதிபருமான டி சில்வா, Sequoia Consultants நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை வைத்துள்ளார்.
முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரரான டி சில்வா, 1983 ஆம் ஆண்டு இலங்கை 19 வயதுக்குட்பட்டோர் அணியை பிரதிநிதித்துவப்படுத்தியவர் ஆவார். தற்போது அமெரிக்கா மாஸ்டர்ஸ் 60 வயதுக்கு மேற்பட்டோர் கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருகிறார். அத்துடன், கிரிக்கெட் வளர்ச்சி மற்றும் இளைஞர்களின் ஈடுபாட்டிற்கான தனது நீண்டகால அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், இலாப நோக்கற்ற தெற்கு கலிபோர்னியா இளையோர் கிரிக்கெட் சங்கத்தின் தலைமைப் பயிற்சியாளராகவும் அவர் தன்னார்வத்துடன் பணியாற்றி வருகிறார்.
- 2026 LPL தொடரில் பங்கேற்க 650 வெளிநாட்டு வீரர்கள் மேல் ஆர்வம்
- கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு
- ஜப்னா கிங்ஸ் அணியில் களமிறங்கும் பானுக, துனித் வெல்லாலகே
தம்புள்ள சிக்சர்ஸ் அணியின் உரிமையாளராக தொடர்ந்து செயல்பட்டு வருகின்றமை தொடர்பில் லங்கா பிறீமியர் லீக் தொடரின் பணிப்பாளர் சமந்த தொடங்வெட, “ப்ரியங்க டி சில்வாவின் தலைமையின் கீழ் தம்புள்ள சிக்சர்ஸ் அணி தொடர்ந்து பயணிப்பதில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மகிழ்ச்சியடைகிறது. ஒரு முன்னாள் கிரிக்கெட் வீரராக, தொழிலதிபராக மற்றும் இளையோர் கிரிக்கெட்டின் வளர்ச்சியில் பங்களிப்பு உள்ளிட்ட அவருடைய பின்னணி இந்த அணிக்கு ஒரு மதிப்புமிக்க ஆளுமையைத் தருகிறது. லங்கா பிறீமியர் லீக் தொடரின் ஒரு முக்கிய அங்கமாக தம்புள்ள அணி என்றும் திகழ்கிறது. எனவே, இத்தொடரை மேலும் போட்டித்தன்மை வாய்ந்ததாகவும், வணிக ரீதியாக வெற்றிகரமான ஒரு டி20 தொடராகவும் நடத்துவதற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என நான் நினைக்கிறேன்.” என்று கூறினார்
இந்த நிலையில், ஐபிஜி குளோபல் நிறுவனத்தின் நிறுவனரும், தலைவருமான அனில் மோகன் கூறுகையில், “ப்ரியங்க டி சில்வா கிரிக்கெட் மீதான புரிதல், வணிகத் தலைமைத்துவம் மற்றும் தம்புள்ள சிக்சர்ஸ் அணிக்கான நீண்ட கால அர்ப்பணிப்பு ஆகியவற்றின் சிறந்த கலவையை கொண்டு வந்துள்ளார். அவரது தொடர்ச்சியான பங்களிப்பு அணிக்கு ஸ்திரத்தன்மையை வழங்குவதோடு, மற்றொரு அற்புதமான பருவகாலத்திற்கு நாம் தயாராகி வரும் வேளையில், ஒட்டுமொத்த லங்கா பிறீமியர் லீக்கின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் வலு சேர்க்கிறது.” என்றார்.
இது தொடர்பில், தம்புள்ள சிக்சர்ஸ் அணியின் உரிமையாளர் ப்ரியங்க டி சில்வா கருத்து தெரிவிக்கையில், “இலங்கை கிரிக்கெட்டுடன் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டும் என்ற எனது விருப்பமே என்னை தம்புள்ள சிக்சர்ஸ் அணியில் முதலீடு செய்யத் தூண்டியது. லங்கா பிறீமியர் லீக் சீரான முறையில் வளர்ச்சியடைந்து வருகிறது. இலங்கையில் கிரிக்கெட் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் அதே வேளையில், அதன் பயணத்தில் பங்களிப்பதில் நான் பெருமையடைகிறேன்.” என்றார்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















