லங்கா பிரீமியர் லீக் (LPL) 2026 தொடரின் ஆறாவது பருவத்திற்கான தொடரில் பங்கேற்க 650 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்கள் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
அதன்படி 2026ஆம் ஆண்டுக்கான தொடரில் பங்கேற்க ஐ.சி.சி (ICC) இன் முழு அங்கத்துவ நாடுகளைச் சேர்ந்த வீரர்களும், அங்கத்துவ நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் ஆர்வத்தினை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
>>கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு<<
இதில் ஐ.சி.சி. இன் முழு அங்கத்துவ நாடுகளில் பாகிஸ்தானைச் சேர்ந்த 102 வீரர்களும், தென்னாபிரிக்காவைச் சேர்ந்த 66 வீரர்களும், மேற்கிந்திய தீவுகளில் சேர்ந்த 75 வீரர்களும், பங்களாதேஷினைச் சேர்ந்த 48 வீரர்களும் நியூசிலாந்தில் இருந்து 41 வீரர்களும், 24 பேர் அவுஸ்திரேலியாவில் இருந்தும், 15 பேர் இங்கிலாந்தில் இருந்தும் 12 பேர் இந்தியாவில் இருந்தும் LPL தொடரில் பங்கேற்க பதிவு செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
அதேநேரம் ஐ.சி.சி. இன் அங்கத்துவ நாடுகளான ஐக்கிய அமெரிக்கா (USA), ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் அயர்லாந்து ஆகியவற்றில் இருந்தும் அதிகளவிலான பதிவுகள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த நாடுகளில் இருந்து மொத்தமாக 21 வீரர்கள் LPL தொடருக்காக பதிவு செய்துள்ளனர்.
எனினும் இந்த வீரர்களில் இருந்து 310 வீரர்கள் மட்டுமே இறுதியாகப் பட்டியலிடப்பட்டு ஜூன் 01ஆம் திதகி நடைபெறும் லங்கா பிரீமியர் லீக் 2026 வீரர்களின் வரைவிற்காக (Player Draft) உள்ளடக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
2026ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் தொடரானது ஜூலை 17 முதல் ஒகஸ்ட் 8 வரை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















